சனி, 19 நவம்பர், 2016

ஒரு நிமிடம் சிந்தீப்பீரா பெற்றோரே...

                        தி இந்து நாளிதழில் வந்த மிகச் சிறந்த கட்டுரை.


பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை கொண்டிருக்கும் பெற்றோர்கள் கண்டிப்பாக படித்து அதன்பின்பு  தங்கள் குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்.


எதற்காக  இப்படி ஓடுகிறோம் ?


சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகள் ஆக்குகின்றன பள்ளிகள்.


நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.


சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன்.

அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது.

அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்து கொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள்.

பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.

நிலைகுலைய வைத்த சூழல் நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக்கான  காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப் படுவதற்கான காரணங்களில்  ஒன்றாக நம்முடைய பள்ளிகளில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார்.

“குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்?” என்று கேட்டபோது கூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை.


பின் இதுபற்றி சிறு பிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலை குலையச் செய்தது.


பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பழகியிருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம் கூட உண்ணாவிரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக் கொள்கிறது.


ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவது கூட நல்லதல்ல. அன்றாடம் இதை மணிக்கணக்கில் செய்யும்போது உடல் சித்ரவதைக்கு உள்ளாகிறது.

உடல் உறுப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை
எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கிறார்கள். அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக் கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் செல்ல வேண்டும்.

அந்தப் பள்ளி வாகனங்கள், வழியில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் சென்று குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடிவந்து வாகனங்களில் ஏறும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடனேயே சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க என்று கழிப்பறைக்கு ஓட முடியுமா?


ஆசிரியர்கள் அனுமதிப்பார்களா?

இது அன்றாடம் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை.

ஆனால், அன்றாடம் இப்படிக் கழிப்பறைக்கு ஒரு குழந்தை அனுமதி கேட்டால், அதை நொறுக்கியே விடுவார்கள் ஆசிரியர்கள்.

வளர்ந்த பிள்ளைகளே கூட கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தயங்கும் சூழலே பள்ளியில் இருக்கிறது.

அப்படிக் கேட்பதைக் கேலிக்குரியதாக, ஏளனத்துக்கு உரியதாகவே நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம்.

உயர் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால், கே.ஜி. படிக்கிற சிறு குழந்தைகளின் நிலை என்ன?


பயமின்றிச் சொல்ல முடியுமா?

ஆசிரியர் என்ற சொல்லும், ஆசிரியர் என்ற பிம்பமும் சாதாரணமானதா அல்லது எளிதில் அணுகக் கூடிய சினேகம் மிக்கதா?


ஒரு நாளில் வகுப்பறையில் ஆசிரியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய வார்த்தை

 ‘ பேசாத!’ என்பதுதான்.

அதற்கடுத்த சொல் ‘ வாய மூடு!’ என்பது.


‘எனக்குச் சிறுநீர், மலம் வருகிறது’ என்று எத்தனை பிள்ளைகளால் பயமின்றிச் சொல்ல முடியும்?


தவறி வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்து விடுகிற குழந்தைகள் எப்படியான கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதை ஏனைய குழந்தைகள் பார்த்துக் கொண்டேதானே வளருகிறார்கள்!


யோசித்துப் பார்த்தால், நம்முடைய ஒட்டுமொத்தக் கல்வி அமைப்புக்குமே இதுகுறித்து இன்னும் பிரக்ஞை வரவில்லை என்ற முடிவை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கிறது. நம்மூரில் எத்தனை பள்ளிகளில் போதுமான அளவுக்குக் கழிப்பறைகள் இருக்கின்றன?


இரண்டாயிரம் பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் இடைவேளையின் போது ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் அத்தனை பிள்ளைகளும் கழிப்பறையைப் பயன்படுத்திவிட முடியுமா?

அந்த அளவுக்கு வசதி கொண்ட பள்ளி என்று தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளைக் காட்ட முடியும்?


கூட்டத்தில், வரிசையில் நின்று சிறுநீர் கழிக்க, மலம் கழிக்கக் கூச்சப்படுகிற குழந்தைகள் உண்டு.


கூட்டமாக இருக்கிறது, வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சிறுநீர் கழிக்காமல் திரும்பி வந்து விடுகிற பிள்ளைகள் உண்டு.

சிறுநீர் கழிப்பதற்காக, மலம் கழிப்பதற்காகக் காத்திருந்த நேரத்தில் மணி அடித்துவிட்டது, நேரமாகிவிட்டது ‘மிஸ் திட்டுவார்கள்’ என்று கழிவை வெளியேற்றாமல், அடக்கிக்கொண்டு அப்படியே ஓடிவந்து விடுகிற பிள்ளைகளும் உண்டு.


குழந்தைகள் பள்ளி செல்லும் காலத்தில் மதிப்பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை.


அரை லிட்டர் போதாது
பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளில் அநேகம் பேர் அரை லிட்டர் தண்ணீருக்கு மேல் எடுத்துச் செல்வதில்லை. ஒரு பகல் முழுவதும் ஒரு குழந்தைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதாது. ஆனாலும், ஏன் கொஞ்சம் தண்ணீரையே எடுத்துச் செல்கிறார்கள்? காரணம் இதுதான்.

காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டுச் செல்கிற பல குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடனேயே கழிப்பறைக்கு ஓடுவதைப் பார்க்கலாம்.


இது ஒரு சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் குறியீடுகளில் ஒன்று. ஒருபுறம், கழிவுகளை உரிய நேரத்தில் வெளியேற்றாததால், இன்னொருபுறம் தேவையான நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் உடல் பாதிப்புக் குள்ளாகிறது.

இதனால், பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர்.

இப்படித்தான் சிறுநீரகப் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் என்பதை மருத்துவர் என்னிடம் விளக்கினார்.

“மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பி விடுகிறார்கள். சிறுநீரை அடக்கி அடக்கி வைப்பதால், சிறுநீர் வெளியேற வேண்டிய பாதையில் கழிவுகள் அடைப்புகளாக மாறி, நெஃப்ரான்களைச் செயலிழக்க வைத்து, சிறுநீரகத்தைச் சுருங்க வைக்கின்றன. சிறுநீரகம் செயல்படாததால் செயற்கை முறையில் டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை.

சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை இரண்டுதான் தற்போதிருக்கும் வழிகள்.

இவை இரண்டுமே முழு ஆயுள் உத்தரவாதம் இல்லாதவை.


எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை நம்முடையது”

என்றார் மருத்துவர்.
எனவே குழந்தைகள் உச்சா போக வேண்டும் எனும்போது எங்கு சென்று விட வேண்டும் என்று அறிவுறுத்தல் கொடுத்து அனுப்ப மட்டுமே செய்ய வேண்டும்.
ஆத்திரத்தை அடக்கலாம்...மூத்திரத்தை அடக்கக் கூடாது என்று பெரியவர்கள் அறிவுறுத்துவது இதனை ஒட்டியே என்பதையும் நினைத்துப் பாருங்கள்...என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன்  ஜானி...

புதன், 9 நவம்பர், 2016

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்...

இன்றிரவு 12 மணி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இதனால் நாட்டு மக்களுக்கும் ஏற்படும் சிரமங்களுக்கு வருந்துகிறோம் பிரதமர் மோடி
ரூ.500 ரூ.1000 நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்க வேண்டும். நவம்பர் 10 முதல் வங்கி அல்லது தபால் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் பிரதமர் மோடி ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து ரூ.500,ரூ1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிகொள்லாம்.
மருத்துவமனைகளில் ரூ.500 ரூ.1000 நோட்டுகள் குறிப்பிட்ட காலம் வரை செல்லுபடியாகும். நவம்பர் 11-ம் தேதி இரவு வரை விமானம்,ரெயில் டிக்கெட் வாங்க மற்றும் மருந்தகங்களில் ரூ.500,ரூ.1000 நோட்டுகள் செல்லும். நவம்பர் 9-ம் தேதி 10ம் தேதிதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காது. டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,காசோலை மற்றும் டிடி பரிவர்த்தனையில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.2000 ரூபாய் நோட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.. 
இதில் பதறவோ, அதிர்ச்சியோ தேவையில்லை.  

ஞாயிறு, 6 நவம்பர், 2016

ஞானமிகு பேரரசர் சாலமன் _விவிலிய கதை வரிசை_013


வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே..
இம்முறை விவிலியத்திலிருந்து பேரரசர் சாலமனின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்ள உங்களை அழைத்துப் போகிறேன்....இறைவன் அவரிடம் அவரது சிறு வயதில் உனக்கு அளவற்ற செல்வம் வேண்டுமா இல்லை அளவற்ற ஞானம் வேண்டுமா என்று கேட்டார்...எதனை சாலமன் தேர்ந்தெடுத்தார் தெரியுமா?
அவர் ஞானத்தைத் தேர்ந்தெடுத்தார். அந்த ஞானம் அவருக்கு அளவற்ற செல்வத்தை மட்டுமல்ல பூமியின் கடைக்கோடி எல்லையில் வசித்த ஜனங்களும் அவரது கீர்த்தியையும் புகழையும் அறிந்து கொள்ளும் வண்ணம் சிறப்பானதொரு வாழ்க்கையை தேடித் தந்தது.

பேரரசர் சுலைமான் என்று இஸ்லாமிய சகோதரர்களால் குறிப்பிடப்படும் இவரது வரலாறு விவிலியப் பார்வையில் உங்கள் முன் காட்சித் தொகுப்புகளாக விரிகிறது. நல்ல ஞானத்தைத் தேடுகிறவன் அதனுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் அடைகிறான் என்பதே இந்தக் கதை நமக்குக் கூறும் நீதியாகும்.
இனி உங்கள் கைகளில் பேரரசர் சாலமன்....




































ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு கல்வெட்டாகக் கருதத் தகுந்தவையாகும். ஏதோ ஒரு நூலை நீங்கள் வாசிக்கையில் உங்களை அறியாமலேயே உங்கள் ஆழ்மனதில் அந்த நூல் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தும். உங்கள் வாழ்க்கை தடம் மாறுவது உங்களை அறியாமலேயே நிகழும் அற்புதமாகும். கிடைத்தற்கரிய புத்தகங்களை எப்படியாவது ஆவணப்படுத்துவதே என் கனவாகும். அந்த நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்து இன்று உதவிடும் நண்பர்கள் பின்னர் ஒரு நாள் இந்த என் முயற்சிக்கு உறுதுணையாக நின்றமைக்கு நிச்சயம் பெருமைப்படும் வண்ணத்தில் அவர்கள் கொடுத்த நூலை என்னால் முடிந்த அளவுக்கு மறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு உங்கள் கரங்களில் இல்லையென்றாலும் ஆவணமாகப் படித்து இன்புறும் விதத்தில் கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளேன். இந்த நூலை வெகுகாலமாகப் பாதுகாத்து என் முயற்சிகளைக் கேள்விப்பட்டுத் தானாக முன்வந்து கொடுத்து உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கும், இந்த நூலை செம்மைப்படுத்தி உங்கள் பார்வைக்குக் கொண்டு வரும் முயற்சியின் ஒவ்வொரு இழையிலும் உடனிருந்து உதவிய திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் என் நன்றிகளை இந்த நேரத்திலும் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..  

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...