வணக்கம் வாசக நெஞ்சங்களே..
நாம் இப்போது வாசிக்கவிருப்பது இம்மாத வெளியீடான பயணம். ஆன்லைன் புத்தக வெளியீட்டு விழாவின் ஒரு பகுதி கொண்டாட்டமாக வெளியாகி இருக்கும் கிராபிக் நாவல் இந்த பயணம்..
உலகம் எப்படி அழியும் என்பதில் வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும் ஒரு கட்டத்தில் உலகம் அழியும். அப்படி அழிந்தாலும் சிதறிக் கிடக்கும் மனிதனின் நிலை என்னவாக இருக்கும்? அவர்கள் ஒன்று கூடவும் தம்மிடையே நட்புறவு பாராட்டவும் ஆசைப்படுவார்களா? இல்லை நாடோடிகளாக அலைந்து வெந்ததைத் தின்போம் விதிவந்தால் சாவோம் என்கிற வழியில் தமது பயணத்தைத் தொடர்வார்களா? அப்படித் தொடரும்போது ஒருவர் இல்லையேல் பிறிதொருவர் எப்படி வாழ்தலைத் தொடர்வார்? என்பதே கதையின் அடிநாதம்.. ஒரு துப்பாக்கி அதில் ஒற்றைக் குண்டு.. வேறே வழியே இல்லையெனில் தன்னை மாய்த்துக் கொள்ளவும் தயங்காத தந்தை, மகன்.. இவர்களின் பயணமும் அவர்கள் காணும் காட்சிகளும் சந்திக்கும் மனிதர்களும், சிதைந்து போன சடலங்களும், இடிந்து போன கட்டடங்களும், நாசமாகிப் போன நாகரிகமும், பாழாய்ப் போன பசியும், எங்கும் தொடரும் வேதனையும் கருப்பு வெள்ளைப் பக்கங்களில் காட்சிகளாகக் கொட்டிக் கிடப்பதே இந்த பயணம்.. மனதில் உறுதியுள்ளோர், உலகினை அழித்த பின்னர் அடுத்து உருவாகும் புதிய உலகினைப் பற்றிய எதிர்பார்ப்புடையோர், எத்தனை நாசமான இடத்திலும் மோசமான வெப்ப நிலைகளிலும் பிழைத்திருக்க விரும்புவோர்.. ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா இந்த உலகில் ஏது கலாட்டா? என்று வயிற்றுப் பசி போக்க தம் இன்னுயிரையும் பணயம் வைப்போர் நிறைந்ததுதான் இந்தப் பயணம்..தனக்கில்லாவிட்டாலும் எதிர் வரும் நபரருக்கு எப்படியாகிலும் சிறு உதவியேனும் செய்திட எண்ணும் நல்மனம் படைத்தோர்களும் இருக்கவே செய்வார்கள் என்பது சிறுவன் வாயிலாக நிலைநிறுத்தப் படுகிறது.. ஒட்டுமொத்தத்தில் இந்தப் பயணம் பயனுள்ள ஒரு பயணமாக இருக்கும்..
என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி சின்னப்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக