திங்கள், 13 டிசம்பர், 2021

மனப் பறவையின் தாகம்_ஜானி சின்னப்பன்




அன்று ஒரு நாளில்
அற்புதமாய் துவங்கிப்பின்
அர்த்தம் அறுந்து
போனதொரு தினத்தின்
அர்த்தமற்ற தருணங்கள் 

அர்த்தமற்றதாய்
மாறிப் போனதொரு
முழு நிலவின்
வெளிச்சப் புன்னகை
சிந்தியதொரு
அர்த்தமற்ற இரவுப் பொழுதின் 

கடந்து போன வினாடிகளில்..
நீயென் மனதைக்
கிழித்துப் போனபின்னே
நடந்ததை நீயறிவாயோ?!?
உன் வார்த்தைகளற்ற 

மௌன வாளின் வீச்சில் 

அறுந்து போன அத்தனை 

நரம்புகளும்
உன் நினைவுகள் இழையோடும்
பட்டுப் போனதொரு கல்
மரமாய் நின்றே
கால் மரத்துப் போனாலும்
நிச்சலனமாய் இலையுதிர்த்து
தவம் கலையா இமை கிழித்து
மூப்பு நையப் புடைக்கும் 

அந்திப் பொழுதுகள் 

அமைதியாகக் கடப்பதை 

அர்த்தமின்றி உற்று நோக்கி 

நிலாக்களை பிடித்துப் பிடித்து 

விளையாடும் ஆட்டத்தில் வழிந்தோடிப் போகிறதென் பெரு மூச்சுக்கள்...
இக்கணமோ எக்கணமோ..
எப்போதும் உள்ளுக்குள்
சக்தியை சேகரித்துக் 

காத்திருக்கும் எந்தன் இதயப் பறவை
கடந்திடும் என்றாவதொரு
பொல்லாத பொழுதில்
தசை கிழித்துப் பறந்து வந்துன்னைத் தேடியலைந்துன் இதயத்தில் சரணடைந்துன் ஆன்மாவில் ஐக்கியமாகிடத் தவிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுதல் என்னால்
இயலாதடிப் பெண்ணே..
ஜானி சின்னப்பன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக