திங்கள், 17 செப்டம்பர், 2012

கதைக்கோர் கிழவி!

அன்புள்ளம் கொண்ட நண்பர்களே!

இனிய வணக்கம்!
       நாம எல்லோருமே பாட்டி கதைகளை கேட்டுதான் வளர்ந்திருப்போம்! நம்ம பாட்டி சொல்லும் கதையில் பாட்டி வடை சுட, காக்கா கொத்தி கொண்டு போகும். அதை, நரி தந்திரமாக கவர்ந்து செல்லும்.
       ஏழு கடல்கள், ஏழு மலைகள், ஏழு ஆறுகள் கடந்து ஒரு ராஜ குமாரி நமக்காக காத்து கொண்டு இருப்பாள். பல தடைகளை உடைத்து கொண்டு போய் பேய்களுடனும், அரக்கர்களுடனும் மல்யுத்தம் புரிந்து மீட்டுக் கொண்டு வருவோம். குழந்தையாக மாறி அவற்றை தரிசித்தால், நாம அந்த கதா பாத்திரமாகவே மாறி விடுவோம். அந்த மன நிலைக்கு நம்மைக் கொண்டு போகும் கதைகள் என்றுமே தகுந்த வரவேற்பு பெறும். வரப் போகிற

                                                  "சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்"


விலை வெறும் நூறு ரூபாய் மட்டுமே மக்கா!

இந்த புத்தகத்தை அதை போன்ற லாஜிக் பார்க்காத மனத்துடன் படித்து, ரசித்து, ருசித்து, அனுபவித்து மகிழுங்கள் ! நண்பர்களே!!

       இது தவிர அறிவுரை சொல்லும் கதைகள் இங்கு நிறைய உண்டு! அவை நமது வாழ்வின் அடிப்படையாக அமைந்து நம்மை நல்வழியில் நடத்திச்  செல்லும்.முக்கியமாக "அவ்வை பாட்டி" (விக்கி பீடியா லிங்க் கொடுக்கணுமா என்ன?????) எனும் மாபெரும் பாட்டி நம்ம வரலாற்றில் பதிவாகி உள்ளார். அவர் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன் போன்ற அதி அற்புதமான வழி காட்டி நூல்கள் நம்மிடையே இன்றுவரை உலவி வருகின்றன. நச்சினார்க்கினியர், ஆண்டாள், காரைக்காலம்மையார் (அவுங்க சாமிகிட்ட வேண்டி பேயா மாறி தவம் செய்தாங்க நண்பர்களே!!!) போன்ற நிறைய வரலாறாக மாறியவர்கள் உண்டு நண்பர்களே!
   
கண்ணகி மதுரையே பற்றி எரியும்படி செய்தாங்க. சீதையோ ஒரு ராமாயணமே உருவாக காரணமாக இருந்தாங்க. எமனின் பிடியில் இருந்து தன் கணவனையே சாவித்திரி. நான் எதுக்கு அவங்களோட வரலாறை துணைக்கு அழைக்கிறேன் என்று கருதும் மானிடர்களே! இப்போ பாக்கப் போறதும் ஒரு தாய்க் குலம்தான். அதுக்கு முன்னாடி என்னோட வரலாறை கொஞ்சம் கொடுத்து உங்களை மகிழ செய்யும் எண்ணம். நிறைய கதைகள் இருக்கு நண்பர்களே. என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் பலப்பல!!! நேரம் கிடைத்தால் கடலை போடும் உத்தேசம் இருக்கு நண்பர்களே! அவை நம்பும்படி இருக்குமா?? தெரியவில்லை? கீழே நான் வாழ்ந்த வாழ்வின் அடிப்படையை கட்டமைத்த எனது பிரியமான ஆயா மற்றும்  தாத்தாவின் புகைப் படங்கள் உங்கள் பார்வைக்கு,

என்னை உருவாக்கி உயர்த்திய தாயும் தகப்பனும் ஆனவர்கள்! 

      அற்புதமான தமிழ் வரலாற்றில் பதிவான பாட்டிமார்கள் குறித்து நான் இங்கே பெருமையோடு பதிவிடும் அதே சமயத்தில் எனக்கு வாய்த்த என் தாய் வழி பாட்டி (எங்க ஊர்ல ஆயா என்று அழைப்போம்) திருமதி.தாயார் அம்மாள் அவர்களும், எனது தாத்தா திரு.அமிர்தம் (காவல்துறை) அவர்களது  அரவணைப்பில் வளர வேண்டிய கட்டாயம்,  என் தந்தையார் மற்றும் குடும்பம் ராணுவ பணி காரணமாக ஈராக் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டபோது வந்தது. எனக்கு மூன்றரை வயதில் எனது பாட்டியார் எனக்கு பாடம் எடுக்கும் சூழல். என்னை என் தாத்தா அப்போதெல்லாம் தன்னுடன் டீ கடைக்கு அழைத்து செல்வார். அங்கே இருக்கும் சிறுவர் மலரை படிக்க கொடுப்பார். அதில் வந்த உயிரை தேடி என்ற திகில் கதை தான் நான் படித்து பயந்த முதல் கதை. அதன் பின்னால் ராணி காமிக்ஸ் வெளியீடு வந்த பின்னர் தினத்தந்தி வாங்கும் முகவர் எங்கள் ஊரில் இருந்தததால் அவரே எங்கள் ஊருக்கு ராணி காமிக்ஸ் அறிமுகம் செய்த புண்ணியத்தை கட்டி கொண்டார். என் ஆரம்ப படிப்புத் திறமை (ஹி ஹி ) ஒரு மாதிரி இருப்பதை உணர்ந்து என் ஆயா முதலில் படம் பார்த்து கதை சொல் பாணியில் பாடம் எடுக்க ஆரம்பித்தார். அப்போ அறிமுகம் செய்து வைத்த, விதைத்த பழக்கம்தான் இன்றும் உயிரோடு இருக்கிறது. சும்மாவா பெரியவர்கள் சொன்னார்கள் "ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்று?" அழகியை தேடியில் இருந்தே வாங்கி படிக்க செய்து புண்ணியம் கட்டி கொண்டார். இன்று எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் ஒரு காமிக்ஸ் உடனிருந்தால் கவலைகளை மறந்து மனம் சாந்தமாகி விடுகிறது நண்பர்களே. 
          அப்போ வாரமலரில் ஒரு கிழவி பேய் கதை வரும். அந்த பேய் ஒரு மரத்தில் வசிக்கும் கொடூரமாக நடந்து கொள்ளும் --- கொல்லும்! அதை படித்து பல நாள் உறக்கம் இல்லாமல் இருந்தது உண்டு நண்பர்களே. அதற்கு படம் வரைந்தவர் மிக பயங்கரமாக வரைந்து இருப்பார். ( அந்த பேய் ஸ்கான் உள்ளவங்க எனக்கு அனுப்புங்க நண்பா இங்கே பதிவிட தகுதியான படங்கள் அவை )

இப்போ நம்ம கதைக்கு வரேன்!
இவுங்கதான் நம்ம மனதை கவர்ந்த கருப்பு கிழவி!!! அறிவுரை சொல்வாங்க. ஆனால் அதை கேட்டு நடக்க நாம முதல்ல உயிரோடுதான் இருக்கமா என்று நம்மை ஒரு முறை சுற்றி பார்த்து , கையை கிள்ளி சோதனை செய்து கொல்ல வேண்டியிருக்கும் நண்பர்களே. ஹீ! ஹீ! ஹீ !


பாட்டி சொல்லும் அறவுரை மற்றும் அறிவுரைகள் நமக்கு மட்டும் அல்ல மானிடர்களே! ஆவி உலகை சேர்ந்தவர்களுக்கும்தான்! நல்லதை நினைப்பவன் வாழ்வான்! மற்றவன் வீழ்வான்! அதான், நம்ம பாட்டி சொல்லும் கதைகளின் அடி நாதம்!!! எனினும் தவறிழைப்பவன் தண்டிக்கப்படும் விதம் படு பயங்கரமாக இருக்கும் நண்பர்களே!! உஷார்!

       "உப்பை தின்றவன் கண்டிப்பாக தண்ணீர் குடித்தே தீர வேண்டும்" என்ற கொள்கையை தன் கதைகளில் எப்போதும் எடுத்தாண்டு வரும் என் அன்பான எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் (ஆயிரம் நாவல்கள் எழுதிய அபூர்வ சிகாமணி ) சிந்தனையை போலவே இந்த பாட்டி சொல்லும் கதைகளும் நியாயம் வெல்லும் என்றே போதித்தாலும் சில சமயங்களில் பொய்யும் ஜெயிக்கும் (தற்காலிகமாகத்தான்) எனவும் சொல்லி பயமுறுத்தும்! 

   எங்கள் அன்பை பெற்ற ஆசிரியர் திரு.அசோகன் அவர்கள் சமீபத்தில் கூட கிராபிக்ஸ் நாவல் வெளியிட்டார். அதை எழுதியவர் டாக்டர் திரு.L.பிரகாஷ். அவர் தனது வாசகர்களுக்கு எழுதும் வார்த்தைகள் எல்லாம் எடிட்டர் ஏரியாவில்  இடம் பெறும். ஸ்கான் செய்து கொடுத்த திரு ஜான் போஸ்கோ அவர்களுக்கு (ஹி ஹி என் மச்சானுக்குதான் நன்றிகள்!) 


திரு.அசோகன் அவர்களை வைத்தோ அல்லது திரு ராஜேஷ் குமார் அவர்களை வைத்தோ நெவெர் பிபோர் ஸ்பெஷல் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று இந்த இடத்தில் என் கோரிக்கையை வைக்கிறேன். திரு பட்டு கோட்டை பிரபாகர், திருவாளர்கள் சுபா ஆகியோரையும் கேட்டு பார்க்கலாம் என்பது எனது அன்பான வேண்டுகோள்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே! நம்ம விஜயன் சாருக்கு தொலை பேசியில் சொல்லலாமே! புறப்படுங்கள் தோழர்களே! சாதனை சரித்திரம் படைப்போம்!

இங்கே ஒரு கிழவியின் கதை உங்க அன்பான பார்வைக்கு மட்டும்! நட்புக்காக மட்டும். இதனை பதிவிடுவதில் எந்த லாப நோக்கும் கிடையாது நண்பர்களே! உங்களுக்கு கிடைத்து இருப்பின் அந்த புத்தகம் கிடைத்த விதம குறித்து பின்னூட்டம் இடுங்களேன். இந்த நூல் கிடைக்க பெறாதவர்கள் மட்டும் கீழே போங்க . மத்தவங்க தாவிடுங்க! நன்றிகள் திரு விஜயன் அவர்களுக்கு போய் சேர வேண்டும் நண்பர்களே. தரமான மொழி பெயர்ப்பு. சிறப்பான தேர்வுகள் என்று தன் லயன் , முத்து , கிளாசிக்ஸ் காமிக்ஸ் வரிசைகளை வடிவமைத்து வருகிறார். வரப் போகும் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் நிறைய பக்கங்களுடன் அதிரடிக்க காத்து இருக்கிறது. நீங்கள் தயாரா? இங்கே வந்து இருக்கும் கதை ஹாரர் ஸ்பெஷல் புத்தகத்தில் வந்த ஒரு சிறு கதை.
அதிர வைக்கும் அட்டை. சிவகாசி பிரகாஷ் பப்ளிஷர்ஸ் கைவண்ணத்தில் என்னமாய் மிரட்டி எடுக்கிறது பாருங்கள்.










  அடுத்தடுத்து இது போன்ற மிரட்டல் விடுப்பது கிழவி கருப்புவின் வழக்கமான பாணி!!
படித்த நண்பர்களுக்கு இங்கே ஒரு வேண்டுகோள். ஹீ ஹீ ஹீ வேறென்ன அற்ப மானிடர்களே! நான்தான் கருப்பு கிழவி பேசுறேன் நானும் என் ஆவி கூட்டமும் உங்களை மிரட்ட நினைக்கிறோம். அடுத்த வருடமாவது எனக்கு வாய்ப்பு தர சிவகாசிக்கு தட்டவும். இல்லை உங்க கனவுல வந்து உங்களை கலாட்டா பண்ற நெனப்புல இருக்கேன் அம்பிகளா!! ஹீ ஹீ ஹீ ஹீ ஹீஈஈ!!!!!! (குரல் மெல்லியதாகி கொண்டே போகிறது)

சரி நண்பர்களே! அப்புறம் என்ன எங்க பாட்டி தங்க பாட்டி நிறைய கதை கைவசம் வெச்சு இருக்காங்க. நீங்க மனசு வெச்சா கதை சொல்லி பயமுறுத்துவாங்க! மீண்டும் சந்திக்கலாம் நண்பர்களே! அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது பாட்டியோட குட்டி பேய்......ஈஈஈஈஈஈ......

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

இதுதான் சிவப்பிந்திய எழுச்சி!

அன்புக்கு மட்டுமே அடி பணியும் நண்பர் கூட்டங்களே!

எதற்கும் அஞ்சா, அடி பணியா ஒரு வீரனின் கதை என்று தலைப்பில் இருந்தாலும் இதில் இரண்டு வீரர்களின் லட்சிய பயணங்கள் காட்டபட்ட்டுள்ளன. 
இந்த கதை இடம் பெற்றது முத்து காமிக்ஸில். நெஞ்சில் வீரமும், மண்ணின் மானமும் சுமந்து வாழ்ந்த மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது அதை எதிர்த்து சீறி எழுவது வீரர்களின் அடிப்படை குணம். அப்படி எழும் தனி மனிதனின் கதை மட்டும் அல்ல இது ஒரு சமூகத்தின் போர்க்குரல் இது "எவர்க்கும் அடிபணியோம்" என்பதை உரக்க கூவி சொல்லும் வெற்றி கதை இது.   

முதலில் ஒரு அடிமை செவ்விந்திய வீரன்:
    பாசமிகு குடும்பத்தினை, அன்பான சமூகத்தின் அரவணைப்பை, ராணுவ வீரர்களின் அடக்கு முறையில் இழந்து விட்டு வாழ்வை தொலைத்து விட்டு விட்டேத்தியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் "சாது மிரண்டால் காடு கொள்ளாது" என்ற கதையாக யுத்த இசையை ஒரு சாதகன் வாசித்ததை கேட்டு பழைய நினைவுகளால் கிளறப்பட்டு பொங்கி எழுகிறான். தன்னை வெறும் குடிகாரனாக நினைக்கும் வெள்ளையர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கில் மீண்டும் அடிமை வாழ்வை மேற்கொள்ள மாட்டேன் என்று தன் இயற்கை கடவுளின் மீது உறுதி எடுக்கிறான். தன்னை அவமானப்படுத்திய குடிகாரர்களை அளித்து விட்டு பின்னர் தன் லட்சியப் பயணத்தை துவக்குகிறான். கண்ணில் படும் அத்தனை வெள்ளையர்களின் மீதும் தாக்குதல் தொடுக்கிறான்.
இரண்டாவது ஒரு வெள்ளை வீரன்:
பில் ஆடம்ஸ் எனும் அந்த வீரன் மேலே கண்ட செவ்விந்தியனின் விஸ்வரூபம் வெளிப்படும் வேளையில் வருகிறான். அவன் தன்னை தொடர்வது கண்டு அவனை மடக்கும் செவ்விந்தியன் தன் மக்களுக்காக குரல் கொடுத்தவன் இந்த வெள்ளையன் என்று அறிந்து உயிருடன் விட்டு விட்டு புறப்படுகிறான். 
 ஜெனெரல் கஸ்ட்டர்--என்ற மனிதன் தன்னிடம் இருக்கும் படைகளை செவ்விந்தியர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் பயன் படுத்துகிறான். அதில் பாதிக்கப்பட்ட ஒருவர்தான் நமது செவ்விந்திய வீரன்.
    
    அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி கிராண்ட் அனுப்பிய வீரனே வெள்ளை வீரன். செவ்விந்தியர்கள் அவனது படைகளை லிட்டில் பிக் ஹார்ன் எனும் இடத்தில் 1876 June 25 அன்று சந்திக்கின்றன. தன் வலிமை - எதிரி வலிமை அறிந்து மோதல் மேற்கொள்ள அந்த ஜெனரல் கஸ்டருக்கு பாவம் திருக்குறள் தெரியாது.  யுத்த தந்திரம் அறியாதவன். மேலும் "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" என்ற உயர்ந்த தத்துவம் அறிய அவன் தமிழ் நாட்டில் பிறந்தவனல்லவே!!!

     எனவே அவனது படையை மூன்றாக பிரித்து வெவ்வேறு திசைகளில் தாக்குதல் தொடுக்கிறான். இதில் என்ன கொடுமை என்றால் எல்லோரும் அவரவர் இடத்தில் நிலை கொள்ளுமுன் செவ்விந்திய ஒற்றர்கள் கண்டு கொண்டு தங்கள் அணிகளை உஷார் படுத்தி விடுகின்றனர்.  இது குறித்து நம்ம இரண்டாவது வீரன் எவ்வளவோ எச்சரித்தும் படையின் போக்கினை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போகிறது. வெள்ளையர்களை வஞ்சம் தீர்த்து கொள்கின்றனர்.  அன்று மட்டும் இறந்த அமெரிக்க வீரர்கள் 263 பேர். இவ்வாறு செவ்விந்திய வரலாற்றிலேயே மிக முக்கிய இடம் பிடித்த செவ்விந்தியர்களின் எழுச்சி அமெரிக்க வரலாற்றை அசைத்து பார்த்தது. இந்த இனம் சியோக்ஸ் எனப்படும் இனம். வரலாறு இதனை பதிவு செய்து வைத்திருக்கிறது. 
                      
அப்புறம் என்ன நண்பர்களே! விடை பெறுவோம்! மீண்டும் சிந்திப்போம்! என்றும் அன்புடன்---ஜானி. 

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஒரு டமால் டுமீல் படலம்!!

வணக்கம் நண்பர் கூட்டங்களே!
முதலில் நம் நண்பர் திரு.சௌந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
நிகழும் மேற்கு அதிரடியில் மாதம் ஒரு வாசகர் பக்கத்தில் இடம் பெற்ற பெருமை அவரையே சாரும்!

வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்!!! மிக அட்டகாசமாக வெறும் ரூபாய் நூறில் அதிரடியாக வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டுள்ள புதிய புத்தகம். வெளியீடு முத்து காமிக்ஸ். கண்டிப்பா உங்க பிரதியை தவற விடாதீர்கள் நண்பர்களே. 
அட்டை இப்படிதான் அதி அற்புதமாக பாலையின் சோகத்தை மனதில் பதிய வைப்பது போல இருக்கு! அமெரிக்க நாட்டின் அதிரடியான துவக்க பக்கங்களை வரலாறு என்றுமே மறவாது. சிவப்பு இந்தியர்களின் வளமை மிக்க தேசத்தை சொந்தம் கொண்டாட அமெரிக்கோ வெஸ்புகி வழியமைத்து கொடுத்தார். கொலம்பஸ் முதலில் கண்டு பிடித்தாலும் அதனை முறையாக உலகுக்கு இது இந்தியா அல்ல-வேறு நாடு என்று அறிவித்ததால் அமெரிக்கோ "அமெரிக்கா" நாட்டின் பெயரில் இடம் பிடித்தார். ஆரம்ப களத்தில் பல்வேறு நாடுகளின் மக்களும் வந்து சொந்தம் கொண்டாட, அதனால் சிவப்பிந்தியர்கள் திண்டாட, நாமெல்லாம் இன்று படித்து மகிழும் அத்தனை அதகளமும் அரங்கேற, அதில் ஒரு பங்காக இன்று நம் முன்னால் மரண நகரம் மிசெளரி::
நம்ம டைகர் பற்றி அறிமுகம் தேவையா? இருந்தாலும் நம்ம திசையில் ஒருக்கா யாரவது ஒதுங்கினா அவங்களுக்கு புரிய வைக்க ஒரு கதை. மத்த நண்பர்கள் தாவிடுங்க. இவர் நம்மில் ஒருவன். சாதாரண மனிதன். மிக மட்டமான நிலை வரை கீழ இறங்கி அடிப்பார். மேல ஏறியும் அதிரடிப்பார். சும்மா இல்ல அந்த கால அமெரிக்க பிரசிடென்ட் வரை இவரது நட்பு உண்டு. நட்புக்கு உயிரையும் கொடுப்பார். கதையின் நாயகனாக வாழ்வார். படிக்கும் வாசகர்கள் தாங்களே டைகர் ஆக உணர வைப்பார். நல்ல ஒரு நாயகர். நம்ம முத்து காமிக்ஸ் தங்க கல்லறை மூலம் அறிமுகம் ஆகி வாசக நெஞ்சங்களில் வாழ்கிறார். அட்டகாசமான கௌ பாய்! 
கதை நாயகன் புதியவர். கதை சொல்லும் விதம் சோகத்தை வரவழைக்கும். அந்த காலகட்ட வாழ்வை பதிவாக்கி உள்ளனர். நாயகர் நம்ம பதினாறாவது ஆண்டு மலரில் இடம் பெற்ற பெயரில்லா (அல்லது முக்கியதுவம் அற்ற) நாயகர் போன்று இருக்கிறார். வெஸ்டர்ன் என்ற பெயரில் வெளி நாட்டில் வெளியான கதை தொடரில் இடம் பிடித்த கதை வரிசை. 

இது போன்ற அதிரடிகளுக்கும் பஞ்சம் இல்லை நண்பர்களே 


 அதிரடிகளுக்கு எல்லாம் அரசனின் அறிக்கை கீழே::




யூனியன் பசுபிக் மற்றும் சென்ட்ரல் பசுபிக் கம்பெனிகளின் அடிதடியில் நடுவே டைகர் புகுந்து புறப்படுகிறார். இரும்புக்கை பொருத்தி இருக்கும் கயவன் செவ்விந்திய கூட்டங்களை யூனியன் பசுபிக் கம்பனிக்கு எதிராக திசை திருப்பி விட அடிதடி ஆரம்பம். டைகர் தலையீட்டை முறியடிக்க முயலும் இரும்புக்கை அரக்கனின் அதிரடி அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த கதையில். எனவே மறக்காமல் வாங்கி விடுங்க. இதன் ஆரம்ப பாகங்களை நம்ம விஜயன் சாரிடம் கலாட்டா பண்ணி பதிப்பிட வைத்து விடலாம் நண்பர்களே. 

லார்கோ வரார்! பராக்! பராக்!


வாழ்த்துக்கள் மகேந்திரன்! 








  அனைத்து ஸ்கான்களுக்கும் நன்றி சௌந்தர் அவர்களையே சாரும்! அவரது பதிவு http://tamilcomics-soundarss.blogspot.in/ அங்கே காத்திருக்கிறது!
மறக்காம வாங்கிடுங்க நண்பர்களே டுமீல்! டுமீல்! 

புதன், 5 செப்டம்பர், 2012

அதிரடியின் திசை மேற்கு!

அன்புள்ளம் கொண்ட அரிய நண்பர்களே! அனைவருக்கும் வணக்கங்கள் ! மரண நகரம் மிசெளரி-எமனின் திசை மேற்கு ஆகிய மேற்கு உலக அதிரடி பக்கங்களை இன்னும் சில நாட்களில் ருசிக்க உள்ள நாம், ஒரு நினைவு கூறும் முயற்சியாக கணவாய் கதைகள் என்ற பெயரில் முத்து காமிக்ஸில் வந்த கதை வரிசையின் முதல் பாகம் உங்கள் பார்வைக்கு, மற்ற பாகங்கள் குறித்த அறிவிப்பு வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் புத்தகத்தில் வரலாம் என்று ஆர்வமாக எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த நூல் ஹாரர் ஸ்பெஷல் புத்தகத்தின் பின் இணைப்பாக வெளியானதாகும். 









செவ்வாய், 4 செப்டம்பர், 2012

இயந்திரப் படையும்!!! இரும்புக்கை மாயாவியும்!!

வணக்கம் காமிக்ஸ் உலக கலக்கல் மன்னர்களே! ரசிகர்களே! அதி தீவிரமாக காமிக்ஸ்முயற்சிகளை தமிழில் ஆதரித்து வரும் மக்களே! தங்கள் வருகைக்கு என் நன்றிகள் மற்றும் வணக்கங்கள்!
          இந்த முறை நமது அற்புதமான ஆற்றல் படைத்த இரும்புக்கை மாயாவியை பற்றிய பதிவோடு வந்து இருக்கிறேன்! மாயாவி என்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்பார்கள் நமது தமிழக காமிக்ஸ் ரசிகர்கள் ! அப்படிப்பட்ட மாயாவியாரின் ஒரு கதை இயந்திர படை. இந்த கதை வந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் மூலமாக இக்கதையின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ஆகவே இந்த பதிவு மிகவும் பயன் நிறைந்த பதிவாக இருக்கும் என்று கருதுகிறேன்!
          

மாயாவி யார்?

       திருவாளர் லூயிஸ் க்ராண்டால் என்கிற ஒரு விஞ்ஞானக் கூட உதவியாளர்தான், தற்போதும் வெறித்தனமாக என்னால் மற்றும் என் காமிக்ஸ் நண்பர் படைகளால் பெருமையாக நேசிக்கப்படும் மாயாவி அவருக்கு ஒரு விஞ்ஞான கூடத்தில் நடைபெற்ற விபத்தில் கை ஒன்று துண்டாகி போகிறது. கை துண்டான நிலையில் அவருக்கு விபத்தில் சிக்கியதால் கிடைத்த அரிய பரிசே மாயமாக மறையும் தன்மை.  அவரது தலைமை விஞ்ஞானி திரு பாரிங்க்டன். அவரது வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட்டு விட அதற்கு பதிலாக பொருத்தபடுவதுதான் இரும்புக்கை!

                    இரும்புக்கை பல விஷேச அம்சங்கள் நிறைந்தது. அவற்றினை கதையை படிக்கும்போதே நன்றாக கண்டு களிக்க முடியும். 
இதோ கதையின் முன் அட்டை : 

 
நன்றிகள் கிங் விஸ்வா அவர்களுக்கு உரித்தாகுக! 
 கதை என்னன்னா நம்ம மாயாவியின் நிழல் படை தலைவர் நீலோன் உறை நிலையில் இருக்கிறார். அவரை காப்பாற்ற வழி அறியாது விஞ்ஞானிகள் திகைத்து நிற்கிறார்கள். 

  கிறிஸ்டோ ரே என்கிற துப்பாக்கி போன கதையில் தீய சக்திகளுக்கு பயன்பட்டு உள்ளது. (போன கதை எது என விவரம் அறிந்தவர்கள் சொல்லுங்க நண்பர்களே) 




அந்த துப்பாக்கியை எதிர் இயக்க நிலையில் வைத்து இயக்கி அவரை நம்ம மாயாவி காப்பாற்ற அவரோ இதுக்கு நன்றி காட்டாம நீதான்யா இதுக்கு காரணம் என்று அவர் மேலே விழுந்து பிடுங்குகிறார். 



அந்த சமயம் பார்த்து நிழல் படையின் சிறப்பான உளவாளி வர அவரை மேஜர் நீலோன் பாராட்டுகிறார்.ஆனால் அந்த உளவாளி ஒரு வெடி குண்டை எடுத்து கொலை வெறியோடு மேஜர் மீது வீசுகிறார்.

நம்ம இரும்பு கரம் காக்கிறது! 


எதனால் இப்படி ஆனார்? மாயாவி உண்மையை கண்டறிய புறப்படுகிறார். அவரது சேட்டை தாங்காத மேஜர் அவஅவரது சகா வைத்து இருந்த பழம் பொருட்கள் கடைக்கு செல்கிறார் அங்கே அவர் மீது தாக்குதல் நடக்கிறது.  

       கதையின் முக்கியமான பகுதி இது ! நம்ம இரும்பு கையாரை இயந்திர சிலந்திகள் சுற்றி வலை பின்னி மடக்கி விடுகின்றன. தலைவரை அறிமுகபடுத்தும் அட்டகாசமான காட்சி இது. வில்லன் ஒரு இயந்திரம்தான். மனித மூளையுடன் இயந்திர உடலுடன் நடமாடும் இயந்திரமாக அறிவாளி ஹெர்மன் என்னும் விஞ்ஞானி உலா வருகிறார். அவரது அட்டகாசங்கள் நிறைந்த பரபரப்பு மிக்க அற்புதமான கதை இது. 


அவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட மாயாவி மனோவசிய மருந்தால் பாதிக்கப் பட்டு நிழல் படை அலுவலர்களை குறித்து பட்டியல் வைத்திருக்கும் ரகசிய இடத்தை அடைய அவர் செய்யும் கலாட்டாக்கள் மிக பயங்கரமானவை. தொழில் நுட்ப ரீதியில் நிழல் படையினரும் அதீத நிலையில் இருக்கிறார்கள். பட்டியல் அடங்கிய மூன்று மாத்திரை வடிவிலான கேப்சூல்கள் ரோபோ காவலர்கள், ஆக்ரோஷமான நாய்கள், மின்சார வேலி ஆகிய பாதுகாப்பு அரணில் இருக்கின்றன. 

மாயாவி நல்லவர் என்று தீவிரமாக நம்பும் மோரிஸ் அவரை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் நட்புக்கோர் நல்லதொரு எடுத்துக்காட்டு ஆகும். இதில் அ.கொ.தீ.க. நபர்கள்தான் பின்னணியில் செயல்படுகிறார்கள் என்ற உண்மை வெளியே வருகிறது. மற்றவற்றை படித்து ரசியுங்கள் நண்பர்களே. இந்த நூல் எனக்கு அன்பளிப்பாக கொடுத்து படிக்க உதவிய அரிய நண்பர் திரு.முருகவேல் பாண்டியன் அவர்களுக்கும், எங்களை எல்லாம் தூண்டி விட்டு கொண்டிருக்கும் திரு.விஜயன் அவர்களுக்கும், எங்கள் அன்புக்குரிய வழிகாட்டி கிங் விஸ்வா அவர்களுக்கும், நண்பர் ஸ்டாலின், திருப்பூர் புளு பெர்ரி நாகராஜ் அவர்களுக்கும் நன்றிகள் பல. மற்ற நண்பர்களும் தங்கள் வசம் உள்ள அபூர்வ படைப்புக்களை பகிர்ந்து மகிழுங்களேன். அப்பப்போ விசிட் அடிங்க அடுத்தடுத்த பக்கங்களை பார்க்கலாம். இப்போ விடை கொடுங்க நண்பர்ஸ்!

இதழின் பின் அட்டை கீழே:

இதுக்கடுத்த புத்தக விளம்பரம். 
இந்த புத்தகம் இருக்கும் நண்பர்கள் உங்க வசமுள்ள புத்தகத்தினை இது போல பதிவிட்டு எங்களை மகிழ்விக்கலாமே!இல்லை என்றால் எனக்கு தெரிவியுங்கள். மிக உதவியாக இருக்கும்.  என்றும் அதே அன்புடன் விடை பெறும் உங்கள் இனிய நண்பன்---- ஜானி 
அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள் இவ்வளவு நல்ல காமிக்ஸ் வெளியீடுகளை தங்கி வரும் நம்ம முத்து காமிக்ஸ் தனது நாற்பதாவது ஆண்டு மலரை கொண்டு வரவிருக்கிறார்கள். முன்பதிவுக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வெளியிடப்படுவதால் உங்க பிரதிக்கு முந்துங்க. 

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...