ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஜடாயு...மீண்டு வந்த நாயகன்...மீண்டும் வந்த நாயகன்...

வணக்கங்கள் பிரியமானவர்களே...!
தமிழ்..உச்சரிக்கையிலேயே இனிக்கும் மொழி..இதில் வெளியாகி ஐநூறு இதழ்களை வெற்றிகரமாகக் கொண்டு வந்து அத்தனையையும் சரித்திரமாக்கியது தினத்தந்தியின் பெருமை மிகு இதழ் ராணி காமிக்ஸ்.
அதில் சாகசம் செய்த நாயகர்கள் அனைவருமே யாராவது வாசகர்களை ஈர்த்தே வந்துள்ளனர். இன்று வரையிலும் நினைவு கூறப் பட்டும் வருகிறார்கள்.


கழுகு மனிதன் ஜடாயு..
இவனது சாகசங்கள் எங்கள் தலைமுறையினரை அதாவது தொண்ணூறுகளின் வாசகர்களைத் தாண்டி மில்லினிய வாசகர்களை அதிகம் கவர்ந்திருப்பது நிறைய வாசக நண்பர்கள் தங்கள் விருப்ப நாயகர்களாக கழுகு மனிதன் ஜடாயுவையும், கரும்புலியாரையும் (இவர் பெயரைக் கேட்டாலே அலறி அடித்து ஓடிய கூட்டத்தில் நானும் ஒருவன்..கதைகள் வேதாளர் வாசித்தவர்களுக்குக் கடுப்பேற்றும். அதுதான் உண்மையான காரணம். நான் வேதாள மாயாத்மா அபிமானி..) குறிப்பிட்டது கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்.

நிற்க..
கழுகு மனிதன் ஜடாயு 27.01.2017 முதல் மீண்டு வந்திருக்கிறார். தினமலர் - சிறுவர் மலர் வாயிலாக....தினத்தந்தியின் ராணி காமிக்ஸ் வாசகர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது போல தின மலர் சிறுவர் மலர் வாயிலாக காமிக்ஸ் வாசிக்கும் நெஞ்சங்களைக் கொள்ளையிடத் "திரும்பி வந்துட்டேன்னு சொல்லு" என்று ஜடாயு உங்கள் இல்லங்களின் கதவுகளைத் தட்டுகிறார். தவறாமல் அவரது தொடர் கதையை வாங்கி வாசித்து இரசியுங்கள். கழுகு மனிதன் ஜடாயு ராணி காமிக்ஸில் கறுப்பு-வெள்ளையில் சாகசம் புரிந்தார். இங்கே அவர் வண்ணத்தில் அதிரடிக்கிறார் என்பது இனிமையான அதிர்ச்சி... மறவாமல் வாசியுங்கள்...
ராணி காமிக்ஸில் இதழ் 388 ஆகஸ்ட் 16-31, 2000 அன்று கழுகு மனிதன் மாய வலை என்கிற கதையில் அறிமுகம் கண்டார். கதையின் அறிமுகப்பகுதியில் அவரது பின்னணி முழுவதும் விவரிக்கப்பட்டுள்ளது. 
இந்தப் பின்னணியை மனதில் இருத்தி கழுகு மனிதன் ஜடாயுவையும் அவரது சாகசங்களையும் இரசிக்கத் தயாராகுங்கள்.

பாகம்-I 

பாகம் II








பிற்சேர்க்கை:
வாண்டுமாமா அவர்களது படைப்பாக Nov-1993 யில்கழுகு மனிதன் தலை நீட்டியிருக்கிறார். அதன் கதை விவரங்கள் அடங்கிய பக்கம்...நினைவு படுத்தியமைக்கு நன்றி திரு.ஞானசேகரன் சார்..திரு.சிவ்..நேரமின்மை காரணமாகக் கிடைத்த இடைவெளியில் எல்லாம் சித்திரக்கதைகளைக் குறித்து என்னால் இயன்ற முயற்சிகளை செய்து வருவதால் நிறைய தகவல்கள் விடுபடும். அவ்வப்போது விமர்சிக்கும்போது மட்டுமே அவற்றை நிறைவு செய்ய எண்ணம் வரும். அதற்குத் தூண்டுகோலாக அமைந்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்...இந்த கழுகு அந்த கழுகு அல்ல.. அது வட மாநில ஓவியர், கதை ஆசிரியர்களின் சேர்க்கையில் விளைந்ததொரு முத்து..
வாண்டுமாமா பேட் மேனின் பாதிப்பில் உருவாக்கியதொரு சித்திரமாகவே இதில் ஜடாயுவைக் காண்பித்திருப்பதாக கதைச் சுருக்கம் தெரிவிக்கிறது. ராமாயணத்தில் ஜடாயு தனது உயிரைப் பொருட்படுத்தாமல் ராவணனுடன் சீதா தேவிக்காக மல்லுக்கட்டி மாய்வார். அவர் இறக்கும் முன் ராமனிடம் சீதையைக் கடத்தியது ராவணனே என்பதைத் தெரியப்படுத்தி மாண்டு விடுவார். அதே ஜடாயுவின் வம்சா வழியில் வந்த ஒரு கழுகு முனி கொடுக்கும் சக்தியைப் பெறும் ஜகதீசன் அதனைக் கொண்டு சமூகத்தின் அநீதிகளைத் தட்டிக் கேட்பதாக அவரது பாத்திரப்படைப்பு இருக்கும்.







எனவே ராணி காமிக்ஸ் நாயகன் புதிய வண்ணக்கழுகாரை ஆதரியுங்கள். ஒவ்வொரு வாரமும் தினமலர்-சிறுவர் மலரில் உங்களுக்காகக் காத்திருப்பார்...


இது மார்ச்-2017
கழுகு மனிதன் தொடர் சிறார்களுக்கான அம்சங்கள் இல்லாததால் நிறுத்தப்பட்டு விட்டது. கழுகு மனிதன் ஜடாயு என்கிற பெயரே நல்லதொரு பெயர்தான். நமது கழுகாழ்வாரை நினைவுபடுத்தும் பெயர். கழுகு தனித்து வானில் வட்டமிடுகையில் பறவை இனங்களுக்கெல்லாம் அதுதான் அரசன் என்கிற அறிவிப்பு அதில் இருக்கும். கழுகு தன் கூட்டை வானுயர்ந்த மலைகளின் மீது கட்டும். கழுகின் சாம்ராஜ்யம் பெரிது. எந்தப் பிராணியும் அதன் பார்வைக்குத் தப்ப முடியாது. அதன் வேட்டையாடும் வேகம் பழங்கால மன்னர்கள் தம் படையுடன் போருக்குப் புறப்படுவது போன்றிருக்கும். ஆமாம்...கழுகு ஒரு தனி நபர் ராணுவம்...

                                                                     பாகம்-III





கழுகு மனிதன் என்கிற கற்பனை பல எல்லைகள் நோக்கி சிறாரை எளிதாக இழுத்துச் செல்லக் கூடிய திறன் வாய்ந்தது..
காலம் கழுகு மனிதனை மீண்டும் ஏதாவது ஒரு ரூபத்தில் கொண்டு வரும் வரை கழுகு தனக்கான இரைக்குக் காத்திருப்பது போல காத்திருப்போம்..
இதுவரை வெளியான தொடரின் சில பகுதிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு..

                                                                   பாகம் IV



தொடர் தொடர வேண்டுமானால் தினமலர் நிர்வாகத்துக்கு ஆளுக்கொரு கடிதம் எழுதிப் போடுங்களேன் நண்பர்களே???

இன்னும் ஒரே ஒரு பாகத்துடன் தொடர் நிறுத்தப்பட்டுள்ளது. கிடைத்தால் இங்கே பதிவிடுகிறேன்..

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய தோழன்...ஜானி 

செவ்வாய், 24 ஜனவரி, 2017

இசைக்கலாம் இளையோரே!

போலீஸுக்கு ஒரு சல்யூட் :) (y)
ஆட்டோவில் தீவைக்கும் வீடியோ, வீட்டிற்கு தீவைக்கும் வீடியோ, ஓடி ஓடித் துரத்தி பெண்களை - குழந்தைகளை லத்தியால் அடிக்கும் வீடியோவைப் பார்த்துக் கொதித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் என்னைக் கழுவி ஊத்த தயாராகிக் கொள்ளுங்கள்.
மாணவர் போராட்டத்தில் மிகச் சிறப்பாய் பணியாற்றிய காவல்துறையினருக்கு என் பாராட்டுக்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாய் இரவு பகல் பாராமல் மாணவர்களைக் காத்தீர்கள். மாணவர்களின் அனைத்து சிரமங்களையும் உங்கள் சிரமங்களாய் பகிர்ந்து கொண்டீர்கள். ஆகப்பெரும்பாலும் அவர்களைப் போலவே உணர்வு கொண்டவர்களாய் நீங்களும் இருப்பதால் உணர்ச்சி வேகத்தில் யூனிஃபார்மில் கோசம் போட்டு கடமையிலிருந்து தவறி போராட்டக்காரராகவே மாறிப் போன காவலர் பற்றியும் ஒரு நாள் கேள்விப்பட்டேன்.
நிர்வாகத்திற்கான - பேச்சுவார்த்தைக்கான கலெக்டரோ, எம் எல் யோவோ, மினிஸ்டரோ, மேயரோ தன் பொறுப்பினைப் புறம் தள்ள, போராட்டக்காரர்களிடம் நீங்களே பேச்சு வார்த்தை நடத்தி புதிய சரித்திரம் படைத்தீர்கள். பேச்சுவார்த்தைக்கு என்று தலைவர்கள் இல்லாத வித்தியாசமான போராட்டச் சூழலில் மைக் வைத்துக் கொண்டே எல்லா நகர்களிலும் பேசியது கடமை மீதான உங்கள் அசாத்திய ஈடுபாட்டைக் காட்டுவதாய் இருந்தது.
இத்தனை நாட்கள் கழித்து சட்ட ஒழுங்கை நிறைவேற்றும் உத்தரவு கிடைத்ததும் இன்று காலை 5 மணிக்குத் தொடங்கி இருட்டுவதற்குள்- ஒரே பகலில் மாணவர்கள் எல்லோரையும் முடிந்த அளவிற்கு சேதாரம் இல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தீர்கள்....
முக்கியமாக மத்திய காவல் படையோ, இராணுவமோ நுழைந்து மாணவர்களையும், நம் மாநிலத்தையும் நாசமாக்குவதற்கு துளியும் வாய்ப்புக் கொடுக்காமல், உயிரைக் கொடுத்து உழைத்து நம்மவர்கள் எல்லோரையும் பக்குவமாய் மீட்டீர்கள்.
குறிப்பாய் திருச்சியில் மாணவர்கள் போராட்டத்தை நிறைவு செய்யும் போது ஒவ்வொருவரையும் காவலர்கள் கட்டியணைத்துப் பிரிந்தது புதிய சகாப்தம்.
இத்தனை நாட்களாய் மாணவர்களோடு எப்படி நீங்களும் பகிர்ந்து உண்டு, ட்யூட்டி முடித்தபிறகு மஃப்டிய்ல் நின்று கோசம் போட்டு, பாடல் கேட்டு மகிழ்ந்தீர்களோ... அதுபோலவே இன்று முழுவதும் மாணவர்களைப் போலவே நீங்களும் - பெண் போலீஸ் உட்பட, அடிபடுவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது.
போராட்டக்கார்களுக்கு காயம் படக்கூடாது. சமூக விரோதிகளின் நாசவேலைகளுக்கு அவர்கள் பலியாகவும் கூடாது. மீடியாவின் - மனித உரிமைப் போராளிகளின் கேள்விகளில் - வீடியோக்களில் சிக்கிவிடவும் கூடாது என்பதற்கிடையே உங்களுக்கான கடமை மிகக் கடுமையானது.
சென்னை மட்டுமல்லாமல் எல்லா ஊர்களிலும் இதுதான்.
டெல்லிக்காரனுக்கு எப்படி தமிழகம் பொருட்டில்லையோ. அப்படித்தான் சென்னைக்காரனுக்கு இங்குள்ள கிராமங்களும்.
கிராமங்களில் செத்தால் ஒருவேளை மனிதர்களின் கணக்கில் வருவதில்லையோ என்னவோ....
ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் வெற்றிக்காக அரசு கொண்டு வந்த அவசரச்சட்டம் - அதன் அவசரச் செயல்பாட்டின் விளைவாய் இதுவரை ஜல்லிக்கட்டு மாடு முட்டி மூன்று பேர் பலியாகியிருக்கிறார்கள்.
அவர்களில் உங்களைப் போல இரவு பகலாய் மக்களைக் காத்துக் கொண்டிருந்த கான்ஸ்டபிலும் ஒருவர். விருது நகர் மாவட்டம் கான்சாபுரம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போது ஜல்லிக்கட்டு மாடு முட்டி இன்று உயிரழந்த கான்ஸ்டபிள் சங்கரும் கூட,போராட்டக்கார்களைப் போலத்தான்.... 29 வயது இளைஞர்.
எத்தனைதான் கொடுமைகள் எதிர்கொள்கிறார்கள் என்றாலும் போராட்டக்காரர்கள் அவற்றை எல்லாம் விரும்பி முடிவெடுக்கிறார்கள். வாங்கிக் கொள்கிறார்கள்.
உங்களுக்கோ, போராட்டக்காரர்களால் அதுவாய் தலையில் வந்து விழுகிறது.
மற்றவர்களைப் போல பொது இடத்தில் கதறுவதற்கோ - கண்ணீர் சிந்துவதற்கோ வாய்ப்போ அனுமதியோ இல்லாத உங்களுக்காக - உங்களின் சத்தமில்லாத சாதனைகளுக்காக....
பிடியுங்கள் ஒரு சல்யூட் :) (y)
(ப்பிரண்ட்ஜ்ஜ்... நவ் யூ ஸ்டார்ட் ம்ம்யூஜிக்... ;) )

  நன்றி: இளங்கோவன் பாலகிருஷ்ணன்.

அமைதி நிலைக்க...




சமீபத்தில் முயற்சித்த சில சித்திரக்கதைப் பக்கங்கள்...


ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ரிங் கொடுங்க மரக் கன்றை அள்ளுங்க


ஒரு வினாடி நில்லுங்க பாஸ்..

நண்பர் சம்பத்தின் பார்வர்ட் செய்தி இது. தகவல் பயனுள்ளதாகத் தோன்றியது.
வாசித்து யோசிங்கப்பா.

ஆறுவது_சினம்

மலரச் செய்த முகங்களை மெல்லச் சுருங்கச் செய்து, சுளிக்க வைக்கிறது இந்தப் போராட்டம்.

மத்திய, மாநில அரசுகள் மீது வைக்கப்பட்ட எதிர்மறை  விமர்சனத்துக்கு அனைவரும் எதிர்பார்த்ததை விட பலன் கிடைத்திருக்கிறது.

நிரந்தரச் சட்டம் வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அதை நிறைவேற்றுவதற்குரிய சிறிது கால அவகாசத்தை அளித்திட வேண்டும். வலையில் சிக்கிய மீன் எங்கும் நழுவி விடப் போவதில்லை. எதிர்தரப்பும் மெச்சத் தகுந்த விதமாய் நடத்தப்படுவதே போராட்டத்துக்கு அழகு.

உலகின் கவனத்தை ஈர்த்துவிட்டோம். அவசரச் சட்டம் வந்தாயிற்று. நிரந்தரச் சட்டத்துக்கு சிறிது அவகாசம் கேட்கிறார்கள். அவ்வளவே. உச்சபட்ச வானளாவிய அதிகாரம் படைத்த அரசாங்கத்திடம் இதற்கும் மேல் எதிர்பார்ப்பது மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் அழகல்ல. களத்தில் எதிரிக்கும் உரிய மரியாதையை அளிப்பதே சிறந்த வீரனுக்கான லட்சணம்.

உணர்ச்சிக் கொந்தளிப்பும், குழு மனப்பான்மையும் வரையரைக்குள் இருக்கும் வரைதான் போற்றத்தக்கது.

போதுமான அளவு போராடியாகி விட்டது. ஆதரவு நிலைப்பாடு எடுத்தவர்களை எதிர்நிலைப்பாடு எடுக்கச் செய்து கூச்சல் குழப்பங்களுக்கு தயவுசெய்து வழிவகுக்க வேண்டாம்.
.
நாளை திங்கள். போராட்டத்தை விடுத்து அவரவர் கடமையாற்ற அமைதியாக கலைந்து செல்வதே புத்திசாலித்தனம். தேவைப்படின் மீண்டும் கூடலாம்.
.
பொறுத்தது போதும் என பொங்கி எழுந்தோம். ஆயினும், ஆறுவது சினம் என்பதையும் மனதில் நிலைநிறுத்துவோம்.
.
-இரா.சுந்தரபாண்டியன்
விழுப்புரம்.

வியாழன், 19 ஜனவரி, 2017

வலேரியன் - விண்வெளி நாயகன்...


வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... நாம் இப்போது பார்க்கப்போவது வலேரியன் காமிக்ஸ். இது ஒரு பிரெஞ்சு காமிக்ஸ். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கதைகள் தொடராக இந்தத் தலைப்பில் வெளியாகி விற்பனையில் சாதித்துக் கொண்டிருக்கின்றன. பியரே கிறிஸ்டின் கதையில் ஜீன் கிளாட் மேசியர்ஸ் கைவண்ணத்தில் உருவாகியுள்ள படைப்பு இது. 
ஓவியர் ஜீன் கிளாட் மெசியரெஸ் அவர்களைத் தனது புதியதோர் அறிவியல் புனைகதைத் திரைப்படத்துக்கான செட் டிசைனை 1991 ன் முடிவில் திரைப்பட இயக்குனர் லக் பெஸ்ஸன் வரைந்து தரக் கோரினார். அவருக்கு இருபத்தைந்து ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருந்த வலேரியன் காமிக்ஸ் மிகவும் பிடித்துப் போய் விட்டதாம். 

எனவே தான் பணியாற்றிக் கொண்டிருந்த தி சர்க்கிள் ஆப் பவர் கதையுடன் நிறுத்தி விட்டு திரைப்படத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார். 
இது இருபத்து மூன்றாம் நூற்றாண்டில் ராக்கெட் தொழிற்சாலையில் பணியாற்றும் ஒரு மனிதனைப் பற்றிய கதை. அவர் வேற்று கிரகப் பெண்ணுடன் காதல் கொண்டு பின்னர் இருவரும் இணைந்து உலகை மற்ற கிரகங்களின் அச்சுறுத்தல்களில் இருந்து எப்படிக் காப்பாற்றுகிறார்கள்? என்பதை மையமாக்கிய கதைதான் வலேரியன்.
எதிர்கால நகரக் கட்டமைப்புகள், விண்கலங்கள், ஆய்வுக் கூடங்கள், சூதாட்ட மையங்கள் இன்ன பிறவற்றுக்காக நமது ஓவியர் ஜீன் கிளாட் நிறைய வரைந்து தள்ளி இருக்கிறார். பறக்கும் போலீஸ் கார் சிறப்பான பங்கு வகிக்கிறது. (இன்னும் ரெண்டு நூற்றாண்டு பின்னாடி பிறந்திருக்கலாம் என்கிற ஏக்கம் எனக்குள் இந்தக் காரைப் பார்த்து) 



1992வில் ஒரு சிறு இடைவெளி விழுந்தது திரைப்படத் தயாரிப்பில். இயக்குனர் லக் பெஸ்ஸன் தி ப்ரொபஷனல் திரைப்படம் இயக்கப் போய் விடுகிறார். ஓவியர் தனது தி சர்க்கிள் ஆப் பவரை வரைந்து முடிக்கிறார். புத்தகம் பதிப்பிக்கப்படுகிறது. அதன் பின்னர் அந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியை இயக்குனருக்கு அனுப்பி வைக்கிறார் ஓவியர் ஜீன். அந்த சமயம் தனது அறிவியல் சார் படத்தில் நிறைய மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் இயக்குனர். முக்கியமாக கதாநாயகனின் வேலை. அவனை ஒரு வாடகை வாகன ஓட்டுனராகக் காண்பிக்கிறார்.
தி சர்க்கிள் ஆப் பவரில் வரும் பறக்கும் காரை விரும்புகிறார் இயக்குனர்..
1997 தி பிப்த் எலிமென்ட் திரைக்கு வருகிறது. வெற்றிச் சரித்திரம் படைக்கிறது. அது தனக்கும் பெருமையளிப்பதாக ஓவியர் கூறுகிறார். 

சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக...









தி வலேரியனின் பின்னணியில் இருக்கும் கதை இதுதான். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்...

குறிப்புகள்: 
trailer  காணத் தவறாதீர்கள்...
விரைவில் தமிழில் காமிக்ஸ் அவதார் எடுக்கிறது.
மேலதிக விவரங்களைப் பெற...http://wikivisually.com/wiki/XB982

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி...

வாடகைப் புத்தக நிலையங்கள்..பட்டியலிடுவோம் வாரீர்..


நானே ஒரு குறுகிய கால வாடகைப் புத்தக நிலைய நிறுவனர்தான். இது போன்று எனது சொந்த ஊரான மணலூர்ப்பேட்டையில் ரப்பர் ஸ்டாம்ப் பதித்து இரண்டு வாடகை புத்தக நிலையங்கள் தங்கள் புத்தகங்களை வாடகைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் எல்லா வாடகைப் புத்தக நிலையங்களும் தங்கள் பழைய புத்தகங்களை..சம்பாதித்துக் கொடுத்து ஓய்ந்து விட்ட புத்தகங்களை கேட்போருக்கு விற்று விட்டதும், வாடகைக்கு எடுத்தவர்கள் அப்படியே குறுகிய மனப்பான்மையுடன் ஆட்டையைப் போட்டு விட்டதும் நேர்ந்து இன்றோ காமிக்ஸ் என்பதே தமிழ் நாட்டில் லென்ஸ் வைத்துத் தேடும் அளவில் குறுகி விட்டது. தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் அவ்வப்போது இதனை உடைத்தே வந்திருக்கிறது.

நிற்க...உங்களிடம் உள்ள புத்தகங்களை எடுத்துப் பாருங்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாடகைப் புத்தக நிலையங்களைக் குறித்த பகுதியை மட்டும் ஒரு புகைப்படமோ முடிந்தால் ஸ்கான் செய்தோ இங்கே பகிருங்கள். எத்தனை வாடகை புத்தக நிலையங்கள் இயங்கின என்று சுமாராகவாவது கணக்கேடுப்போம். முன்வாருங்கள். உங்களிடம் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றுமே பொக்கிஷம்தான். அதில் அடங்கியுள்ள இது போன்ற தகவல்களும் பொக்கிஷங்களே. பின்னால் ஆராய்ச்சி செய்யப் போகும் மாணவர்கள் நலன் கருதியும் எதிர்காலம் எப்போதுமே இறந்த காலத்தை மறந்து போகக்கூடாது என்கிற தொலை நோக்கோடும் இந்தப் பதிவை இடுகிறேன். ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக் கொள்கிறேன். (எங்க ஊர் புக்கு வெச்சிருக்கிற நண்பர்கள் வெளியில வரும் நாள் எனக்கு ஒரு திருநாள்...)  எந்த புத்தகம் என்கிற விவரம் கூடத் தேவையில்லை. அது காமிக்ஸ்தானா? அதில் அடிக்கப்பட்டுள்ள முத்திரை அல்லது கையால் எழுதப்பட்ட விவரங்கள் போதும். நானெல்லாம் அந்தக் காலத்தில் ஸ்டாம்ப் அடிக்கிற அளவுக்கு வசதியில்லைங்க. எங்க ஊரில் ரெண்டு வாடகை புத்தக நிலையங்கள் இருந்தது என்று சொன்னேன் அல்லவா? அதில் ஒன்று என் சித்தப்பா திரு.ரபேல் வைத்து நடத்தியது. பின்னர் தொண்ணூறுகளில் என் சகோதரன் செந்தழல் ரவியின் இல்லம் அமைந்துள்ள மணம்பூண்டி பகுதி வாடகை நூல் நிலையத்தை அவன் எனக்கு அறிமுகம் செய்தபோது இரும்புக்கை நார்மன் முதலான எக்கச்சக்கப் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. அதில் திருக்கோவிலூர் கடைகளில் அப்போதுதான் வெளியாகி இருந்த சிரித்துக் கொல்ல வேண்டும்_பேட் மேன் சாகசம் மறக்கவியலாதது. இருந்த காசுக்கு அன்றைக்குக் கடையில் தொங்கிய நான்கு இதழ்களையும் வாங்க முடியாமல் ஏதோ ஒன்றிரண்டு வாங்கினோம். நாம் நம்ம வேலையைக் கவனிப்போம். வாடகைப் புத்தக நிலையங்களைப் பட்டியலிட்டு அவர்களுக்குரிய மரியாதையை செலுத்துவோமே?
1.பாரதி வாடகை நூல் நிலையம், 19, உலகளந்தார் மாட வீதி, (பஸ் நிலையம் அருகில்) காஞ்சிபுரம் 631502 
என்னிடம் உள்ள அனைத்துப் பெயர்களும் சிறிது சிறிதாகப் பட்டியலில் சேர்க்கப்படும். இன்றும் இந்த வாடகை நூல் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கலாம் உங்கள் பகுதியில்..அவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் வாடகை நூலகங்களை இப்பகுதியில் காண நேர்ந்தால் அதன் விவரங்களை இங்கே தெரிவிக்கலாம். புகைப்படம் எடுத்து அனுப்பலாம். இதே பதிவில் சேர்த்து விடுகிறேன். 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்...ஜானி.

புதன், 18 ஜனவரி, 2017

கவனியுங்கள் காளையரே!

மாடு -- செல்வம் என்பது பொருள். செல்வத்தை இழக்க யார்தான் சம்மதிப்பார்? எம் மண்ணின் மைந்தராம் காளை மாடுகள் வளம் பெற வேண்டும். இனப்பெருக்கத்துக்கு பொலி காளைகளாகப் பெரும்பாலும் இருப்பவையே தவிர, அவற்றையும் ஏறு தழுவப் பயிற்றுவிப்பதும் உண்டு.  மற்ற அனைத்துக் காளைகளும் பெட்ரோல் போடத் தேவையில்லாத தாவர உண்ணியான உழைக்கும் வர்க்கம்தான். வண்டி இழுக்கும். ஆளில்லா விட்டாலும் தன் வீட்டுக்குத் தனது வண்டியை இணையாக இழுத்து நடந்து செல்லும் காளையர் உண்டு எம் மண்ணில். முன்னே மழலைகள் வந்தாலும் தவிர்த்துச் செல்வதை எம் கிராமங்களில் இன்றளவும் பார்க்கலாம். வண்டி யோட்டி வண்டியிலேயே படுத்துறங்கி வீடு சேர்வதை எம் தெருக்ககளில் காணலாம். நமது உழைப்புக்கான மரியாதை நமது உறவினங்களான மாடுகளே. மாடுகளான செல்வத்தைக் காத்துக் கொள்வதால் விவசாயிகளைக் காக்கும் தன்மைக்குத் தானாகவே ஆதரவுக் கரம் நீட்டுகிறோம். மனத்தில் வைங்க. மாடுன்னா செல்வங்க. மாடுன்னா கெத்துங்க.

பசுவோடு பழகுங்க பாஸ்..

ஒரு மாட்டை வளர்த்திருக்கிறீர்களா? அதன் கழுத்தின் கீழே தடவிக் கொடுத்திருக்கிறிர்களா? நாய் மட்டுமா பாசம் காட்டும்? பசுக்களும், கன்றுகளும், காளைகளும் குடும்பத்தில் ஒருவராகப் புழங்கும். என் தந்தையார் பால் கறக்க அமர்வார் அருகில் போய் அமர்ந்து காம்பைத் திருகிப் பால் கறப்பதை வேடிக்கை பார்ப்போம். அது போல் அமர்ந்து பார்த்ததுண்டா நீங்கள்? மாட்டுப் பொங்கல் சமயம் காளை வைத்திருப்போர் கொம்புகளை உப்புத்தாள் வைத்துத் தேய்த்து வண்ணம் தீட்டி மகிழ்வர். பசு வைத்து இருந்த நாங்கள் கிறிஸ்தவரெனினும் பசுவுக்கும் கன்றுக்கும் குளியல் போட வைத்து  தோட்டத்து மலர்களை மாலையாகக் கட்டி மாலையிட்டு, அலங்கரித்து குங்குமமும் மஞ்சளும் சேர்ந்த பொட்டு வைத்து சந்தனத் தூளைத் தண்ணீர் கலந்து தெளித்து கற்பூரம் கொளுத்தித் தீபம் காட்டி எமக்கு உன் இரத்தத்தைப் பாலாக ஆண்டு முழுவதும் தந்து உதவுவதற்கு நன்றி தாயே என வணங்கி ஆக்கி வைத்தப் பொங்கலை ஊட்டி மகிழ்வோம். தாய்க்குப் பின் பாலைத் தரும் பசுக்களுக்கு எம் பகுதிகளில் ஆதரவு அதிகம்.  காளைகள் பொதுவாக ஒரு வயதுக்குப் பின்னர் உழவுப் பணிகளுக்கும், பிற மாநில உணவுத் தேவைகளுக்கும் அதிக நாட்கள் தங்காது விற்பனைக்கு அனுப்பப்பட்டு விடும். பொதுவாக நமது தமிழக மாடு வகை இனங்கள் போதிய ஆதரவின்றி அழியும் நிலை தொடர்கிறதென்றால் அடிப்படையான விவசாயம் படுத்து விட்டதே காரணம். இது சல்லிக்கட்டு தொடர்பான  சங்கதி மட்டுமல்ல. விவசாயிகளின் நல்வாழ்வும் அது தொடர்பான சங்கதியும் கூட..

எங்கள் ஊர் நூலகத்துக்கான இரஷ்ய சிறுவர் இலக்கிய அன்பளிப்புகள்

 வணக்கங்கள் அன்பு வாசக இதயங்களே. உங்கள் அனைவருக்கும் வேலன்டைன்ஸ் டே வாழ்த்துக்கள்..  சிறுவர் இலக்கியத்தில் இரஷ்ய படைப்புகள் மிகவும் சிறப்பான...