வெள்ளி, 2 அக்டோபர், 2015

வாழ்ந்தது போதுமா? சில துளிகள்....

“வாழ்ந்தது போதுமா” என்கிற இந்த சித்திரக் கதை 19.10.1972 – 15.02.1973 வரையிலான காலக்கட்டத்தில் வீர கேசரி நாளிதழின் ஒரு பகுதியாக வெளியாகியுள்ளது.




வாழ்ந்தது போதுமா கதாசிரியர் மற்றும் ஓவியர் திரு.சந்ரா அவர்கள் தொண்ணூற்று ஏழு அத்தியாயங்களில் இந்தக் கதையினை செதுக்கி இருக்கிறார்.  

தொடர் தொடர்ந்து வெளியான காலத்தில் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பது நிச்சயம்.
இந்தக் கதையின் ஆசிரியர் இதனை வடிவமைத்த விதமே அலாதியானது. எந்த இடத்திலும் ஊர்ப் பெயரோ, இடத்தின் பெயரோ குறிப்பிடப் படாமல் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இதனை தங்கள் நாட்டில் (இந்திய, இலங்கை) நடைபெறும் கதையாகவே எண்ணிப் படித்து இன்புற முடியும்.
கதையில் இரண்டு பெயர்களை சூடிக் கொண்டு அலையும் பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கது. குமார் என்கிற முத்து, சிங் என்கிற சிங்காரம், ஜெயஸ்ரீ என்கிற நந்தினி  என்று இரண்டு பேரிட்டு அழைக்கும்படியாக கதாபாத்திரங்களை வடிவமைத்திருப்பது இந்தக் கதையின் சிறப்பு.
இக்கதையில் மெல்லியதாக ஓடும் ஈழத் தமிழ் உச்சரிப்பு இதன் தனிச்சிறப்பு. இது போன்று வேறு ஒரு ஈழத் தொடர்புடைய சித்திரக்கதை கிடைக்கும் வரை இது ஒன்றுதான் நம் வசமுள்ள ஈழத் தமிழர்களின் அடையாளம் மிகு கதை என்று சொல்லலாம். வீர கேசரியில் வேறு ஏதேனும் கதைகள் கிடைக்குமா என்று இன்று வரை முயற்சி மேற்கொண்டு வரும் தோழர்களுக்கு என் நன்றிகள்.



கதைச் சுருக்கம் பின்வருமாறு,
கதை எதிர்மறையில்  இருந்து துவங்குகிறது, முதலில் சிங்காரம் எப்படி சிறையில் கிடைத்த உதவியுடன் தப்பிச் சென்று தாஸ், ஜெயஸ்ரீ கூட்டணியில் இணைந்து சிங் அவதாரம் எடுக்கிறான் என்பதை முதல் பகுதி விளக்குகிறது.
தாஸுடன் கடத்தல் தொழிலில் சிங் ஜெயஸ்ரீயின் ஆலோசனைப்படி இணைந்து பணிபுரிகிறான்.   
தாஸ், ஜெயஸ்ரீயைக் காதலித்து அதனால் உயிரைப் பறிகொடுக்க, அவன் இடத்துக்கு சிங் நகர்கிறான். தாஸிடம் கடத்தல் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அவனுக்கு தாஸ் இறந்ததால் உண்டான அச்சத்தில் கடத்தல் பொருளுடன் தப்பிக்க எத்தனித்தும் ஜெயஸ்ரீயின் குறுக்கீடு காரணமாக தப்பிக்க முடியாமல் போகிறது.
ஒரு நாள் ஒரு கொலைக்காரியிடம் இருந்து ஒரு பெண்ணைக் காக்கிறான் தாஸ். அந்தப் பெண் தன்னைத் துரத்தியவள் யார் என்று தெரிந்து கொண்டவர்களை எல்லாம் கொன்றுவிடும் குணாதிசயம் படைத்தவள் என்கிறாள். கிட்டத்தட்ட கறுப்பு விதவை சிலந்தி போன்று. அவள் பெயர் நந்தினி என்றும் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவள் நடிகையாக இருந்தபோது கோடீஸ்வரர் செல்வரத்தினம் என்பவரைக் கொலை செய்தவள் என்றும் கொலைக்கு சாட்சியாக இருந்தவர்களையும், வழக்கை விசாரித்த நீதிபதியையும் கொலை செய்து விட்டு எங்கோ வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லை. அவள் உள்ளூரில்தான் இருக்கிறாள். அவளுடைய முகம் தீயில் கருகி அடையாளமே தெரியாமல் ஆகிவிட்டது. அதனை செய்தது தான்தான் என்றும் அதற்காகவே தன்னைக் கொலை செய்யத் துரத்துகிறாள் என்றும் அப்பெண் கூறுகிறாள். அவள் தன்னுடைய சகோதரியும் கூட என்று அதிர்ச்சியளிக்கிறாள்.

அவளைத் தன்னுடனேயே தன் மறைவிடத்துக்கு அழைத்து வருகிறான் சிங்.  
ஜெயஸ்ரீ இது கண்டு கோபம் கொள்கிறாள். அவள் ஒரு இரகசிய உளவாளி என்று திட்டமாகக் கூறுகிறாள். எனவே அவளைக் கொன்றுவிடும் எண்ணத்துடன் சிங் அவளைத் தேடிட அவளோ காவல் நிலையத்துக்கு சிங்கின் காரினை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறாள். அங்கு இன்ஸ்பெக்டர் குமார் என்பவரை சந்திக்கிறாள். தொடர்ந்து வரும் சிங் காவல் நிலையத்திலேயே அவளை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்புகிறான்.

ஆனால், அவனது கார் காவல் நிலையத்திலேயே இருக்கிறது. அதனைக் கொண்டு அவனைப் பிடித்து விடுவார்கள் என்று அஞ்சும் அவனை ஜெயஸ்ரீ கவலைகொள்ள வேண்டாம் என்கிறாள். அவளது கண்களும் ஏனோ கலங்குகிறது.
இதற்கிடையே, அந்தக் காரின் உரிமையாளரை சந்திக்கும் இன்ஸ்பெக்டர் குமாரிடம் ஏற்கனவே தொலைந்து போன தன்னுடைய கார்தான் அது என்று கோடீஸ்வரர் அஸ்கார் ஜி கூறுகிறார். கார் அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
ஆனால் கடத்தல், கொலை தொழில்களின் மையப் புள்ளியே அவர்தான். சிங்குக்கு உதவியாக இன்னொரு மரணதண்டனைக் கைதியைத் தப்பிக்க வைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இம்முறை ஆக்சிஜன் சிலிண்டர் ஒரு சிறைக்காவலர் மூலமாக உள்ளே போகிறது. அதன் வாயுவைப் பயன்படுத்தி கம்பியை உருக்கி கைதி ஒருவன் தப்பிக்கிறான். அவனுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஜெயஸ்ரீ (அவள் கண்ணாடி அணிந்திருப்பது இந்த அத்தியாயத்தின் விசேடம்) இடம் சிங் தன் சந்தேகத்தை வெளியிடுகிறான். வந்திருப்பவன் இன்ஸ்பெக்டர் குமார் ஜாடையில் இருப்பதாகக் கூறவே குமார் இவன் இல்லை என்று உறுதிப்படுத்த அவனைக் கொன்று விடும் எண்ணத்துடன் செல்லும் சிங்குடன், முத்துவையும் அனுப்பி வைக்கிறாள் ஜெயஸ்ரீ.


விமான நிலையத்தில் வைத்து அமெரிக்காவுக்கு சிகிச்சை பெற கிளம்பிக் கொண்டிருக்கும் குமாரை சுட்டுக் கொல்கிறார்கள். முத்து, சிங்குடன் அதன் பின்னர் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வருகிறான். ஒரு நாள் சிங்கின் ஆசையைத் தெரிந்து கொண்ட முத்து ஜெயஸ்ரீயை அவனுடன் இணைத்து வைக்கிறான். இடையே அவளது அலுவல் அறையை முத்து திருட்டுத்தனமாக சோதித்துக் கொண்டிருக்கும்போது ஒரு அடியாளிடம் சிக்கிக் கொள்கிறான். அந்த அடியாளை மடக்குகிறான். அடியாளின் பெயர் ஆனந்தன். அவனை மற்றவர்கள் தேடத் துவங்குமுன்னர் முத்து சிறையில் அடைக்கிறான். மற்றவர்களது விவரங்களை முழுமையாக சேகரித்த பின்னர் நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் முத்து வடிவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் குமார்.

ஆனந்தன் சிறையில் இருக்கும் செய்தி தெரிந்த ஜெயஸ்ரீ அவனைக் கொன்றுவிட்டு வர முத்துவிடம் கூறுகிறாள். அவளது இரகசியத் தலைவனுக்குத் தொலைபேசும் முத்து ஆனந்தனை ஜெயஸ்ரீ சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், சிங்கும் அவளும் காதலிப்பதாகவும் வலையை விரிக்கிறான்.
இரகசியத் தலைவன் அஸ்கார் ஜி கோபமாகி நேரில் வந்து நிலைமையை அறிந்து ஜெயஸ்ரீயின் சுயரூபத்தை சிங்கிடம் காட்டுமாறு உத்தரவிடுகிறான். வழக்கமாக தன் சுய ரூபத்தை அறிந்தவர்களைக் கொன்று விடுவது ஜெயஸ்ரீ என்கிற நந்தினியின் குணம். அதன்படியே தன் சுயரூபத்தை வெளிக்காட்டிய பிளாக் விடோ சிலந்தி ஜெயஸ்ரீ, சிங்கைக் கொலை செய்யத் துரத்த அவனை விளக்குகளை அணைத்து முத்து என்கிற இன்ஸ்பெக்டர் குமார் காப்பாற்றுகிறார்.
அவனுக்கு உதவுவதாகக் காட்டிக் கொண்டு டேப் ரிக்கார்டரில் அவனது வாக்குமூலத்தை இரகசியமாகப் பதிவு செய்து விடுகிறார். பின்னர் அவனைக் காவலர்களிடம் ஒப்படைக்கிறார்.
சிங் காவலர்களிடம் சரணடைந்து விட்டதாக நினைக்கும் அஸ்கார் ஜி, தன் சொத்துக்களை விற்று எடுத்துக் கொண்டு ஜெயஸ்ரீயையும் ஒழித்து விடத் திட்டமிடுகிறான். இதனை இன்ஸ்பெக்டர் குமார் ஜெயஸ்ரீக்கு தெரிவித்து விடுகிறார். கூட்டணியில் குழப்பம் ஏற்படுகிறது.
விமானத்தில் தப்பிக்க முயலும் கடத்தல் கும்பல் மொத்தமும் இன்ஸ்பெக்டர் குமாரால் மடக்கப்படுவதுடன் இக்கதையானது நிறைவை எட்டுகிறது.
விரைவில் நமது வலைப்பூவிலும் நிறைந்து, திசை எங்கிலும் மணம்பரப்பி,  உலகெங்கிலும் தமிழ் பேசும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி நீண்டதொரு விடை கொடுத்து அனுப்பப் போவது நிச்சயம். இந்த தருணத்தில் திரு.அலெக்ஸ்சாண்டர் வாஸ் அவர்களுக்கு என் நன்றிகளைக் கூறிக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். அய்யா அவர்கள் ஒரு சிவில் என்ஜினியர். அன்னாரது சித்திரக்கதைகளின் மீதான தீவிரத் தேடலும் தாகமுமே இன்று உங்கள் முன்பு வாசமிகு மலராக மலர்ந்துள்ளது. 

அவருக்கு என் இதயப் பூர்வமான நன்றிகள். தொழில்நுட்ப ஆதரவை அளித்து உதவிய திரு.சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களுக்கும், இடையறாத பணிகளுக்கிடையே இந்தக் கதையை வாசித்து ரசித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தொண்ணூற்று ஏழு அத்தியாயங்களில் நிகழும் இந்தக் கதைக்களம் தொடர்ச்சியாகப் பதிவிடப்படாமல் நிறைய இடைவெளி எடுத்துக் கொண்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இடையே என் வாழ்விலும், பணியிலும் நிறைய மாற்றங்கள், சவால்கள். தொடர்ந்து ஆதரவளித்து “அந்தக் கேசரியை எப்போது கிண்டி முடிப்பீர்கள்? “ என்று செல்லமாகக் கோபித்துக் கொண்ட நண்பர்கள் எனக்கு இருப்பதாலேயே என் உலகம் சந்தோஷத்தால் நிறைந்து வழிந்து ஓடுகிறது. நீங்கள் இல்லாமல் இது அருமையான முடிவுரையைக் கண்டிருக்காது தோழர் படைகளே. விரைவிலேயே கிண்டி முடித்து விடுகிறேன், நீங்கள் கவலையே படாதீங்கோ பாலாஜி, வினோ ஜி. நீங்க கேட்டது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிங்க. யாருமே கேட்காமலேயே இருக்கிறார்களே என்றொரு வருத்தம் இருந்ததுங்க. ஒருவேளை பிரியலையோ? என்கிற சந்தேகமும் இருந்துதுங்க. அதுதாங்க இந்தப் பதிவு. 

நிற்க, 
இது போன்று இன்னும் காணக்கிடைக்காத அரிய பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவை நம் தமிழ் மக்களின் அடையாளங்கள்.

 என்றும் வென்று நிற்கும் தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சித்திரக்கதைப் பூக்களின் அணியில் இன்னும் ஒரு மலரைத் தொடுத்து எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி அர்ப்பணிக்கிறேன் நம் தமிழ் நெஞ்சங்கள் சார்பாக....என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி.



2 கருத்துகள்:

  1. நன்றி ஜானிஜி, வீரகேசரியை ஆதியோடந்தமாய் கிளரிட்டீங்க!!!
    கேசரி பவுடர் கலர் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது������
    கடகடன்னு இல்லை சடசடன்னு துப்பாக்கியில் சுடறா மாதிரி பதிவை போட்டு தாக்கிட்டீங்க...
    நீங்க ஊகிச்சது சரியே, கதையில் எனக்கு குழப்பம்தான்.
    பதிவையே இன்னும் ஒரு முறை படிக்க வேணும்.
    திரு. அலெக்ஸாண்டர் வாஸ் அவர்களுக்கும் நன்றி.
    கேசரின்னு அல்வாவை குடுத்துறப் போறீங்களோன்னுதான் கேட்டேன்.
    ஆயாவை விசாரித்ததாக சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ஹி ஹி ஹி கதையில் அப்படி விதவிதமான பாத்திரங்கள் மொத்தமாக இறக்கிவிட்டு அனைத்தையும் கையாண்டிருக்கிறார் திரு.சந்ரா. அவரது மற்ற படைப்புகளும் இது போன்றே சாதுரியமாகக் கையாளப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. விரைவிலேயே நிறைவைக் கண்டுவிடும். இன்னுமொரு தொடர் இதன் இடத்தைப் பிடிக்கும் (?!?!??!?) ஆனால் அது ஒரு குறுந்தொடர் என்று மட்டும் இப்போதைக்குக் கூறி வைக்கிறேன். தங்கள் கருத்துக்கு நன்றி தோழரே.

    பதிலளிநீக்கு

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...