சிற்றிலக்கிய வகையான சித்திரக்கதைகள் வெகுஜனப் பார்வைக்கு வருவதும் கால ஓட்டத்தில் நிலைத்து நிற்பதும் பெரிய சவாலான நாட்கள் அவை. இந்திரஜால், அம்புலி மாமா போன்ற பெரும் பத்திரிக்கைகளுக்கு இணையாக தமிழில் களமிறக்கி சிவகாசி மண்ணுக்குப் பெருமை தேடித்தந்த முத்து காமிக்ஸின் புகழுக்கு காரணமான பெரியவர் திரு.சௌந்தரராஜன் இறைவனடி சேர்ந்து விட்டார். அவருக்காக இறைவனை வேண்டுவோம்.
திரு.ஜெயமோகன் தனது கட்டுரையில்
முத்து காமிக்ஸ் நூல்களை நான் என் எட்டாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறேன். இன்றும்கூட மாதம் ஆயிரம் ரூபாய்க்கு அந்நூல்களை வாங்கிவிடுகிறேன். மூளை சூடாகாமல், இயல்பாக வாசிக்கத்தக்கவை. வணிக எழுத்தின் சில்லறைப் பாவனைகளும் அற்றவை. நம்மை சிறுவனாக உணரச்செய்பவை. குறிப்பாக நான் டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன். என் நண்பர் கடலூர் சீனு, ஜா.ராஜகோபாலன் எல்லாருமே முத்து காமிக்ஸ் ரசிகர்கள்தான்.
ஐரோப்பிய ,அமெரிக்க காமிக்ஸ்களின் ஓவியச்சட்டகங்கள் மிகத்தேர்ச்சி கொண்டவை. சினிமா எனக்குச் சலிப்பூட்டுகிறது, அதில் நான் கற்பனை செய்ய ஏதுமில்லை. ஆனால் காமிக்ஸ் ஒரே சமயம் காட்சியனுபவமாகவும், என் கற்பனையைத் தூண்டும் வாசிப்பனுபவமாகவும் உள்ளது. ஆகவேதான் இந்த மோகம்.
முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன் மறைந்தார். அவருக்கு அஞ்சலி.
என தெரிவித்துள்ளார். சித்திரக்கதை வாசகர்களை துயரத்தில் ஆழ்த்தி மறைந்த ஐயா திரு.சௌந்தரபாண்டியன் தன் இறுதி மூச்சுவரை சித்திரக்கதைகளையே சுவாசித்தவர். மிக சமீபத்தில் ஒரு வாட்ஸ் அப் குழு அவருக்காக உருவாக்கப்பட்டிருந்தது. அதில் சித்திரக்கதைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்து தெரிவித்துக் கொண்டே இருப்பார். அந்த தீபத்தை தொடர்ந்து ஏந்திப் பயணிக்க வாசகர்களும் லயன் குடும்பத்தாரும் சித்திரக்கதை நேயர்களும் தயாராகவே இருப்பார்கள். அவரது கனவு என்றுமே இளமையாக இனிமையாக அன்னாரது நினைவுகளுடன் தொடரும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக