திங்கள், 25 ஏப்ரல், 2016

காந்த மலை மர்மம் _முத்து மினி காமிக்ஸ் 005

வணக்கம் தோழமை உள்ளங்களே!
இம்முறை உங்களை சந்திக்க வந்திருப்பது சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய காந்த மலை மர்மத்துடன். பெர்முடா முக்கோணம்  என்றொரு பகுதி  நாம் வாழும் இந்த  ஆண்ட்ராய்ட் யுகத்திலும் சவால் விடும்  ஒரு மர்மப் பிரதேசம். அங்குள்ள ஒரு வித காந்த விசை அந்தப் பகுதியில் செல்லும் விமானங்களையும், கப்பல்களையும் கடலுக்குள் மூழ்கடித்து விடுகிறது. அது ஏன் என்பது ஆராய்ச்சியாளர்கள் தலையைப் பிய்த்துக் கொள்ளும் ஒரு சங்கதி.
அந்தக் கதையை இங்கே புத்தகப் பிரியனுடன் சேர்ந்து வேறு கோணத்தில் ராம் வாயீர்க்கர் ஓவியத்துடனும், பாரா பாகவத்  அசத்தும்  விதத்தில் கொடுத்துள்ள கதை இந்த காந்த மலை இரகசியம். 

புத்தகப் பிரியன் பிரபுவின் பக்கத்து வீட்டு சிறுவன் ராஜூ. கடற்பயணக் கதைகளின் மீதான ஆர்வமிகுதியில் துறைமுகம் சென்றடைகிறான். அங்கே மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அவனை அழைத்துக் கொண்டு கப்பலில் பயணமாகிறார். இதனை நேரில் கண்ட போர்ட்டரை பிரபு விசாரித்தறிகிறான். கப்பல் பெயர் ஆயிஷா. அது ஆப்பிரிக்கா நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கப்பல் கேப்டனுக்குத் துறைமுகப் போலீசார் தகவல் அளிக்கின்றனர். அந்தப் பெண்மணி ஒரு மயில் உருவத்தைப் பச்சை குத்தி விடுவதால் சிறுவனின் அடையாளம் மறைக்கப்பட்டு விடுகிறது. ராஜூவைத் தனது மகன் என்றும் அனைவரின் முன்பும் குறிப்பிடுகிறாள். அவர்கள் செல்லும் கப்பல், ஏடன் சென்றடையாமல் புயலில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டு மடகாஸ்கரின் வடமேற்கில் இனந்தெரியாத ஈர்ப்பு விசைக்கு ஆளாகி ஒரு தீவின் பாறைகளில் மோதி விபத்துக்குள்ளாகிறது. பிரபு எப்பாடுபட்டேனும் ராஜூவைக் கண்டறிய வேண்டும் என்கிற வெறியில் கிடைத்த தடயங்களை வைத்துக் கொண்டு அதே தீவுக்கு ஒரு படகோட்டியின் உதவியால் வந்தடைகிறான். அங்கே ஒரு தனி ராஜ்யமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து ராஜூவையும் மீட்டு தீவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஸ்டம் என்ற தலைவனது முரட்டுக் கும்பலை அடக்கியோடுக்கித் தீவில் சிறை வைக்கப்பட்ட அனைத்துக் கைதிகளையும் மீட்கிறான் பிரபு. அப்போதுதான் ஒரு நெகிழச் செய்யும் கதை தெரிய வருகிறது.  
     புரபசர் நிரண் எலெக்ட்ரோ டைனமிக்சில் நிபுணர். அவருக்குக் குழந்தை பாக்கியமில்லாத வருத்தத்தில் தனது சொந்த ஊரான மும்பையை விட்டுத் தன் மனைவிக்குத் தெரியாமல் ஏடன் சென்றடைகிறார்.
     ரஸ்டம் திருட்டுக் கும்பலின் தலைவன். அவன் எரிமலை வகையைச் சேர்ந்த இந்தத் தீவுக் கூட்டங்களில் அலைகள் கொண்டு வந்து சேர்க்கும் துகள்களில் ஒரு வகை காந்த சக்தி கொண்டவையாக இருப்பதைக் காண்கிறான். அவனது எண்ணத்துக்கு உதவியாக புரபசர் நிரண் வந்து சேர்வதால் அவரை வைத்து காந்த சக்தியைப் பன்மடங்கு அதிகரிப்பு செய்து குறிப்பிட்ட தீர்க்க ரேகையில் செல்லும் பெரிய கப்பல்களைக் கவர்ந்து தீவுக்கு ஈர்த்து வரும்படி கருவி ஒன்றை அமைத்து விடுகிறான். அதுதான் காந்த மலையின் இரகசியம். பாறைகளுக்கு காந்தத் தன்மையை அதிகரித்து அதனால் கப்பல்களை மோதி விபத்தடைய வைத்துப் பல உயிர்களைப் பலி வாங்கி, தப்பும் உயிர்களை அடிமைப்படுத்தி அவர்களைக் கொண்டே சரக்குகளைத் தரையிறக்கி என அவன் செய்து வரும் அட்டூழியங்கள் கணக்கிலடங்கா.


     ராஜூ தன்னுடன் வந்த பெண்மணிதான் சதுரா என்றும். அவர் புரபசர் நிரணின் மனைவியார் என்பதைப் புரிந்து கொண்டு விட, பிரிந்த புரபசர் தம்பதியினரை சேர்த்து வைக்கிறார்கள். இல்லாத மகனை இருப்பதாக நம்ப வைத்தாவது தன் கணவனை மீண்டும் தன்னுடன் வாழ வகை செய்ய எண்ணிய, அதற்காக எந்தத் தேசத்துக்கும் செல்லத் துணிந்த உயர்ந்த உள்ளம் படைத்த பெண்மணியாக அவரது பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஒரு சிறுவனைத் தன் மகனாக ஏற்றுக் கொள்கிறாள். அவன் ஓடிப் போனதால் அந்த இடத்தில் கடல் பயணத்தில் ஆர்வம் காட்டிய ராஜூவைப் பயன்படுத்திக் கொண்டு விடுகிறாள் என்பதும் தெளிவாகிறது.
     இதற்கிடையே வெடி விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்ப முயலும் ரஸ்டமும் அவனது அடியாட்களும் சுற்றி வளைத்துக் கைது செய்யப்படுகிறார்கள். அனைத்தும் இனிதே முடிய சுபம்.
     கதை இந்திய மண்ணில் துவங்கி ஆப்பிரிக்க மண்ணில் நிறைவடைவது இந்தக் கதையின் ஒரு சிறப்பம்சம். மிகையில்லாத நாயகனாக இதில் புத்தகப் பிரியன் பிரபுவும், ஆர்வமிகு ராஜூவும், கணவனைத் தேடித் தேசம் விட்டு தேசம் செல்லும் சதுராவும், வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் மனம் போன போக்கில் செல்லும் புரபசர் நிரணும், லாபத்துக்காக எதையும் செய்யத் தயங்காத ரஸ்டமும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்து பாத்திரங்களும் நிறைவாக உள்ளன.
எனக்கு இந்தக் கதையில் பிடித்த சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
-என் இனிய நண்பர்களே!
 -இறகு வம்சம் எழுதிய கவிஞர் தணியாத ஆர்வமே தன்னைத் தூண்டி இந்த நூலை எழுத வைத்தது அது மிகப்பெரும் கடலைத் துடுப்புப் படகால் கடப்பதற்கு ஒப்பானது என்று கூறினார்.
-அவனது மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பது போல சுடர் விட்டுப் பிரகாசித்து ஜொலித்த அவனது பிரகாசமான கண்கள்.
-எனக்கு மகன்தான் இல்லையே தவிர மகன் போன்ற அன்பு கொண்ட ஒரு பிள்ளையின் அன்பு கிடைத்தது.
இவை எங்கே வருகின்றன?
வாசித்து மகிழுங்கள் புத்தகப்பிரியன் பிரபுவின் "காந்த மலை மர்மம்" விரைவில் முத்து மினி காமிக்ஸ் வெளியாக உள்ளது. உங்கள் பிரதிக்கு இப்போதே லயன் நிறுவனம், சிவகாசிக்கு முன்பணம் செலுத்தலாம். அல்லது விற்பனை துவங்கியதும் வாங்கி வாசித்து மகிழலாம். விலை ரூபாய் 20/- மட்டுமே. நிச்சயம் உங்களுக்கு ஒரு மாறுபட்ட இந்தியத்தரத்தில் ஒரு அருமையான கதை காத்திருக்கிறது.

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.

வணக்கம் தோழர்களே...
இந்தப் புத்தகம் வெற்றிகரமாக வெளியாகி வசூலை நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் குவித்துக் கொடுத்து சில மாதங்களாகிறது.. இன்று 22.03.2017 இந்தப் பதிவினை மீண்டும் புதுப்பித்துள்ளேன்.. புதிய வெளியீட்டில் இருந்து.. இதனைக் கண்டு எடுத்து மீண்டும் இதன் உயிர் தப்பிப் பிழைத்து நண்பர்களின் கரங்களில் தவழ்வதற்காக தன் பெரும் பொருட்செலவையும் பொருட்படுத்தாத நண்பர்கள் திரு.டெக்ஸ் சம்பத், திரு.கலீல், திரு.தயாளன், திரு.ஸ்டாலின், திரு.சதீஷ் போன்ற பலரால்தான் காமிக்ஸ் உலகம் அற்புதங்களையும் அதிசயங்களையும் சந்தித்து வருகிறது. அதனை சராசரி வாசகனான நானும் உங்களுடன் சேர்ந்தே அனுபவித்து வருகிறேன். அப்படிப்பட்ட தியாக தீபங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்..  இந்த வெற்றி வாசகர்களுடைய வெற்றி.. பிரம்மாண்டமான தேடலையும் நாற்பது ஆண்டுகாலத் தவத்தையும் உள்ளடக்கிய மாபெரும் வெற்றி.. இந்த புத்தகத்தை மீண்டும் உயிர்ப்பித்து அதற்காக கிடைக்க வேண்டிய நற்பெயரை சில நல்ல உள்ளங்களால் நழுவ விட்ட திரு.சொக்கலிங்கம் பன்னீர்செல்வம் அவர்களுக்கும், இந்தப் படைப்பை வாசகர்களின் தேடலை மதித்து, வாசகப் போராட்ட உணர்வைப் புரிந்து கொண்டு மறுபதிப்பாகக் கொண்டு வந்த லயன் காமிக்ஸ் ஆசிரியர் திரு.விஜயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். புதிய வெளியீட்டில் இருந்து உங்களுக்காக சில பக்கங்கள்..












     

2 கருத்துகள்:

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...