புதன், 26 மே, 2021

புயலின் புன்னகை..!_ஜானி சின்னப்பன்


 
ஹேய்...
என் தெளிவற்ற வானிலையின் காரணி நீ...

மேகமாய் என்னைக் கடந்து போகிறாய்.. மலைபோல் சிலையெனத் தயங்கி நிற்கிறேன் நான்.. 

நீ போனதும் என்னைச் சுற்றிச் சுழலும் சூழ்ந்திடும் வெறுமையிடம் சொல்லிக் கொள்வேன் நீ நாளையும் வருவாய் அப்போது சொல்லிவிடுவேன் என் காதலையென..

ப்சு.. போனமுறை நீ அடுக்கிய  அதே பதிலா.. 
என்று சலித்து கொண்டது  என் தனிமையின் சூன்யவெளி....

மீண்டும் அவளைக் கண்டதும் உறைந்து போனாயா?!?
அடுத்த வருடமும் வருவேன் நான் அதற்குள்ளாவது  சொல்லித் தொலையேன் உன் காதலை என்று கேலி செய்து வீசிப் போனது புயல்...

இதயத்தின் ஏக்கம் வாட்டியெடுக்கும் 
வேதனையை மறைத்துக் கொண்டே புன்னகை முகமூடியால் போர்த்திக் கொள்கிறேன் மறுபடியும் என்னை நான்..
_ஜானி சின்னப்பன்

#jscjohnyphotos #jscjohnyvisuals #ஒளிப்பதிவதிகாரம் #ஜானி #jscjohny
#கவிதையதிகாரம்

செவ்வாய், 25 மே, 2021

*அதோ என் விடியல்*_ஜானி சின்னப்பன்

 



-----
நித்தம் நித்தம்
உந்தன் முகம் தேடி
புத்தம் புது காலைதோறும் காத்திருப்பேன்..
குடம் ஏந்தி நீர் சிதற 

நடனமாடும் அழகோடு 

வளையோசை குலுங்கல்கள் கொலுசின் ஓசையோடு 

உன் வரவை தெருக்கோடிவரை 

பறை சாற்றிடும் அதிகாலை வேளைகளில்..
ஆனந்தப் பறவைகளின் இன்னிசை உன் வரவுக்குக் கட்டியம் கூற.. என்னைத் தாண்டிப் போகும் 

உன் நீள நிழலின் 

ஒரு ஓரம் என் மீது பட்டாலே 

என் ஜென்மம் அடைந்திடுமே மோட்சமெனக் காத்திருப்பேன்..
பொழுதும் புலர்ந்தது 

காலையும் வந்தது..
அதோ நீ..
இதோ நான்..
மேகப்பொதியொன்று
மிதந்து செல்வதாய்
கற்பனையில் மனம்
திளைக்க
உன் ஓரப்பார்வையின்
வீச்சு என்னைக் கிறங்கடிக்க..
போதுமடா சாமி...
பூலோகத்தின்
அதிர்ஷ்டசாலி
நானாகிப்போனேன்..

நாளையா...
இன்றே இருதயத்தில்
பல யுகங்கள்
தாங்குமையா...

_ஜானி சின்னப்பன்
Pic credit: Appu Siva

ஆனைமலை

செவ்வாய், 18 மே, 2021

**கண்ணைக் கொஞ்சம் சிமிட்டி வையேன்..**_ஜானி சின்னப்பன்



ஏய் பெண்ணே..        

உன் விழியீர்ப்பில் 

திசைமாறிய பூமியின் 

இரவு பகல் தட்டுத்தடுமாறுவதை 

நீதான் கொஞ்சம் 

உணர்ந்து கொண்டு 

கண்ணைக் கொஞ்சம்

சிமிட்டி இடைவெளி 

விட்டு வையேன்..            

 பாவம் பிழைத்துப் போகட்டும் 

இந்தப் பூவுலகம்..

_ஜானி சின்னப்பன்

நீ வரும் பாதை_ஜானி சின்னப்பன்

 


அன்பே,
உன் காலடியோசை தொலைவில் கேட்கும்போதே இங்கே புல்பூண்டுகளும் குதூகலம் கொள்கின்றன..

உன் கொலுசின் ஓசை கேட்டு புழு  பூச்சிகளும் தலையை ஆட்டி இரசிக்கின்றன..

உன் காதில்  அசைந்தாடும்  குடை ஜிமிக்கியின் அசைவில் செடி கொடிகள் சேர்ந்தசைந்து மகிழ்கின்றன..

உன் காந்தப் பார்வையில்
புயல்மழை திரண்டு பாதையெங்கும் ஓடையாய் மாறிடுமோவென்றொரு பிரமை...

கானலாய் தொலைவில்
தெரிந்தாய்.. அடடே எப்போது 
எனைக் கடந்து
சென்று மறைந்தாய்?

உன் கொலுசொலி கடந்து போனபின் அந்தப் பாதையில் ஆயிரம்பேர் வந்தாலும் எனக்கு அது ஆளரவமற்ற சாலையே..
_ஜானி சின்னப்பன்
Pic Credit: தோழர் வீரபாண்டியன்

திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட எல்லையில் நொச்சிகுளம்

ஞாயிறு, 16 மே, 2021

பேரன்புடன்.._ஜானி சின்னப்பன்

 

நானும் வரலாமா...

உற்று நோக்கிய

உந்தன் பார்வை 

வர்ணிக்க வார்த்தையின்றி 

வாலாட்டி நிற்கிறது இன்னும் மனதுள்.. 

என் விசுவாசமே

உனக்காக விரைவில் 

வீடு திரும்ப வேண்டும்.. 

கட்டாயம் காத்திருப்பாய் 

இருந்த இடம் அகலாமல்..

_ஜானி சின்னப்பன்

ஏகாந்தத்துடன் ஓர் ஏக்கம்_ஜானி சின்னப்பன்

 

சிந்தை  மயங்கும் 

மாலைப் பொழுதுகள் 

உன் வரவையெண்ணி தவங்கிடக்கிறது.. 

என்னை நீ கடந்து போகும் 

ஒவ்வொரு வினாடியும் 

உன் இருத்தலின் அதிர்வுகள் குத்தூசியாய் இதயத்தில் 

உருவாக்கும் மின்னதிர்வுகளைப் பற்றி உனக்கெப்படித் தெரியும்.. 

தொலைவில் சூரியன் 

இந்த கண்ணுக்கெட்டா பறிமாற்றத்தை  கீற்றாய்ப் 

பாயும் தன் மெல்லிய 

ஒளியலைகளில் 

அளவெடுத்து நகைக்கிறது.. 

கடந்து சென்ற 

உன் காலடியின் 

ஓசை தேய்வில் 

உயிரே தேய்வதாய் 

உருக்கொள்ளும் பிரமையை உண்மையோவென 

யோசிக்கிறேன்.. 

ஏகாந்த வெளியின் 

தென்றல் வருடலாய் 

மாறிப்போன உன் 

இருப்பின்மையின் 

சூன்யத்துடன்.. 

_ஜானி சின்னப்பன்

சனி, 15 மே, 2021

அதோ என் படகு.._ஜானி சின்னப்பன்

 


ஒற்றை மரம்.. 

ஓராயிரம் நினைவுகள்.. காலமென்னும் பெருவெளியின் மௌனம்.. 

தனிமையின் அமைதி.. 

ஓடுகின்ற தண்ணீர்..

உருண்டோடும் நாட்கள்.. 

அதோ ஒரு நிச்சலன பாறை சாட்சியாய் நிற்பதைப் போல

 வாழ்வெனும் பெருவெளி 

வேடிக்கை ஏராளம் காட்டிவிட்டு 

கனவுகளின்  நிழலாய் மறைந்து போகிறது.. 

புதிர்த் தோட்டம் ஒன்றின் 

பசுமைப் பெரும் பரப்பொன்று 

விசித்திரப் புன்னகையுடன் காத்திருக்க..

என் படகு எங்கே எனத் தேடி 

சலித்துப் போகிறது மனம்..  

விடை கிடைக்காத கேள்விகளோடு முற்றுப் பெறாக் கவிதையும் நானும்.. 

மரத்தடி நிழல் வார்த்தைப் பூக்களோடு அதோ எனக்காகக் காத்திருக்கிறது..   விடியலின் முதல் கீற்றுக்கு இன்னும் நேரமிருக்கிறது.. 

முற்றுப்பெறா முத்தங்களை வடுக்களாய்  சுமந்தபடி..

 கதைக்கக் காத்திருக்கும் கனவின் பெருமரம் கரைவதற்குள் கேட்டு விடக் கேள்விகள் ஏராளத்தை சுமந்தபடி அதோ வந்தாயிற்று என் படகு.. விடைபெறுகிறேன்.._ஜானி சின்னப்பன்



புதன், 12 மே, 2021

*தீர்த்தே தீருவேன்*-வினாடிக்கதை_ஜானி சின்னப்பன்



கூர்மையாகத் தீட்டி வைத்திருந்த  அரிவாளை ஓங்கி  போட்டான் ஒரு போடு.. தெறித்து விழுந்தது கிளை.. விறகோடு வீட்டுக்குத் திரும்பியவனை மோதி நசுக்கி விட்டுக் கடந்து போன லாரியில் அடுக்கப்பட்டிருந்தன மரக்கட்டைகள்.. 

_ஜானி சின்னப்பன்

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...